காலேஜ் ஆரம்பிக்கணுமா? தாராளமா வாங்க! தமிழக கல்வி நிறுவனங்களுக்கு பப்புவா நியூகினியா ஆளுநர் அழைப்பு!
கோவை: பப்புவா நியூ கினியா நாட்டில் அரசு மட்டுமே கல்வி மற்றும் மருத்துவமனைகளை நடத்தி வருவதால் தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் அந்நாட்டிற்கு வர வேண்டும் என மேற்கு நியூ பிரிட்டன் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவையில் இளைஞர்களின் வளர்ச்சி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பப்புவா நியூ கினியா தீவு நாட்டின் மேற்கு நியூ பிரிட்டனின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல், மற்றும் அந்நாட்டின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு உள்ளிட்டோர் மாணவர்களிடையே உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் சசீந்திரன் முத்துவேல், ''பப்புவா நியூ கினியா நாட்டில் பல கல்லூரிகள் உள்ளன. ஆனால் அங்கு அரசாங்கத்தால் மட்டுமே அந்தக் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இருப்பது போல் அங்கு தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் இல்லை. இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை அங்கு அழைத்து கொண்டிருக்கிறோம்.''
''பப்புவா நியூகினியாவில் தொழில்கள் தொடங்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. இங்கு உள்ளவர்களுக்கு வியாபாரமாகவும் இருக்கும் பப்புவா நியூ கினியா வளர்ச்சி அடைந்தது போலவும் இருக்கும். எங்கள் நாடு ஆஸ்திரியாவில் இருந்து விடுதலை பெற்ற நாடு. இந்தியாவுக்கும் பப்புவா நியூகினியா நாட்டிற்கும் 1980ஆம் ஆண்டு முதலே நட்புறவு உள்ளது. அங்கு கனிம வளம் மற்றும் விவசாய நிலங்கள் பரந்து விரிந்து உள்ளது.
''சாட்டிலைட் தொடர்பாக ஆராய இந்தியாவிலிருந்து பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வரும் 25ஆம் தேதி இஸ்ரோ குழுவினர்கள் வருகிறார்கள். பப்புவா நியூகினியாவில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து ஒரு வருடத்திற்கு 80ஆயிரம் மாணவர்கள் வெளியில் வருகிறார்கள். 10 ஆயிரம் பேர் தொழில் படிப்பு, பத்தாயிரம் பேர் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். 10 ஆயிரம் பேருக்கு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கிறது. இதனால் 50 ஆயிரம் மாணவர்கள் மேல் படிப்புக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.''
''அங்கு தனியார் கல்வி நிறுவனங்கள் வந்தால் அவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு கொடுக்கலாம். வெளிநாடு தமிழர்கள் தங்களது கலாச்சாரத்தை மறக்கவில்லை'' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications