நாளை நல்ல செய்தி வரும்.. திமுகவுக்கு ரெட் அலர்ட்.. செங்கோட்டையன் இணைப்பு குறித்து தவெக அருண்ராஜ்!
ஈரோடு: தவெகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணையவிருக்கும் சூழலில், நாளை நல்ல செய்தி வரப் போவதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு ரெட் அலர்ட் என்று கூறிய அருண்ராஜ், செங்கோட்டையனின் இணைப்பை மறைமுகமாக உறுதி செய்திருக்கிறார்.
தவெகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைய உள்ளார். ஏற்கனவே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள செங்கோட்டையன், இன்று மாலை விஜய்யுடன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். முதற்கட்டமாக விஜய், செங்கோட்டையன், ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆலோசனையின் போது செங்கோட்டையனுக்கு வழங்க வேண்டிய பொறுப்புகள், செங்கோட்டையன் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பின் 2ஆம் கட்டமாக விஜய், செங்கோட்டையன் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகிய மூவரும் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.
இந்த ஆலோசனையின் முடிவில் செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழுவை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதேபோல் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்க உள்ளதாகவும், அங்கு வெற்றியை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜான் ஆரோக்கியசாமி மூலமாகவே செங்கோட்டையன் தவெகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் செங்கோட்டையனுக்கான பணிகளை ஜான் ஆரோக்கியசாமியுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கவும் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். அதேபோல் செங்கோட்டையனுக்கு விஜய் தேநீர் விருந்து கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
நாளை காலை 10 மணிக்கு மேல் நல்ல நேரம் பார்த்து செங்கோட்டையன் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய இருக்கிறார். இதனை தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் மறைமுகமாக உறுதி செய்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து அருண்ராஜ் பேசுகையில், நாளை நல்ல செய்தி வரும்.. திமுகவுக்கு ரெட் அலர்ட் இது என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications