மறைந்தும் பயன்தரும் வழக்கறிஞர் ஞானபாரதி! அப்பாவிகளுக்கு விடுதலை பெற்றுத் தந்தவரின் உடல் தானம்!
கோவை: மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி காலமானார். கோவை குண்டுவெடிப்பு சமயத்தில் பொய் வழக்கு போடப்பட்டவர்களுக்காக வாதாடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தவர் ஞானபாரதி. ஞானபாரதி, தான் இறந்து விட்டால் தனது உடலை மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்திருந்த நிலையில், அவரது விருப்பப்படியே இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.
கோவை வடவள்ளி நவாவூர் பகுதியைச் சேர்ந்த ஞானபாரதி (76), கோவை நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவிகள் சிலர் கைது செய்யப்பட்டபோது அவர்களுக்காக ஆஜராகி வாதாடி, அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தவர். எழுத்தாளரும், வழக்கறிஞருமான ஞானபாரதி இன்று காலமானார். அவரது மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது, அவரால் பயன்பெற்ற ஏராளமான உழைக்கும் ஏழை மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் பிறந்த ஞானபாரதி, சென்னை சட்டக்கல்லூரியில் பயின்றபோது இந்திய மாணவர் சங்கத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக பணியாற்றினார். பட்டப்படிப்பு முடித்து மதுரை தீக்கதிர் பதிப்பில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். பல ஆண்டுகள் தீக்கதிர் மற்றும் செம்மலரில் கட்டுரைகளை எழுதினார்.
பின்னர் கோவையில் வழக்கறிஞர் பணியை தொடங்கிய ஞானபாரதி, சுமார் 50 ஆண்டு காலம் வழக்கறிஞராக பணியாற்றி, உழைக்கும் ஏழை மக்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியவர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கு ஆதரவாக வாதாடி அவர்களுக்கு விடுதலையும் பெற்றத் தந்தவர் ஞானபாரதி.அடித்தட்டு ஏழை மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக வழக்குகளில் ஆஜராகி அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்தவர் ஞானபாரதி.
குற்றவியல் வழக்கறிஞரான ஞானபாரதி சிறந்த எழுத்தாளரும் கூட. மூங்கில் கழி, சந்திரமுகி ஆகியவை அவர் எழுதி வெளிவந்த சிறுகதை தொகுப்புகள் ஆகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஞானபாரதி, தான் இறந்து விட்டால் தனது உடலை மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக வழங்கிட வேண்டும் என தெரிவித்து இருந்த நிலையில், அவரது விருப்பப்படியே இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞானபாரதியின் உடல் தானமாக வழங்கப்பட்டது. ஞானபாரதியின் உடலை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பெற்றுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications