குரங்கு.. கீழ்த்தரம்.. அண்ணாமலைகிட்ட வேறென்ன எதிர்பார்க்க முடியும்.. விளாசிய செந்தில் பாலாஜி, சரவணன்
கோயம்புத்தூர்: செய்தியாளர்களை குரங்கு என்று பாஜக தலைவர் அண்ணாமலை அழைத்தது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
இன்று செய்தியாளர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேட்டி எடுக்க முயன்றனர். கோவை கார் வெடிப்பு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டிக்கு பதில் கேட்டு பாஜக தலைவர் அண்ணாமலையை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களை பார்த்து, மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள், என்று அண்ணாமலை கோபமாக கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர்களை பார்த்து மிகவும் கோபமாக அண்ணாமலை இப்படி பேசினார்.

அண்ணாமலை கோபம்
அதை தொடர்ந்து பேசிய அண்ணாமலை.. நான் என்ன சொன்னேன். நீங்கள் சாப்பிடுங்கள். நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று தானே சொன்னேன். இப்படி வந்ததும் ஊரில் நாயி, பேயி, சாராயம் விக்கிறவன் சொல்றதை எல்லாம் நான் கேட்டு அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? நகருங்க இங்கிருந்து என்று அண்ணாமலை கோபமாக கத்தினார். அண்ணாமலை இப்படி பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

சரவணன் அண்ணாதுரை
செய்தியாளர்களை குரங்கு என்று பாஜக தலைவர் அண்ணாமலை அழைத்தது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை இது தொடர்பாக செய்துள்ள ட்விட்டில், இப்படிப்பட்ட கீழ்த்தரமான பேச்சுக்கு அண்ணாமலை எப்போது மன்னிப்பு கேட்கப்போகிறார்? இப்படி பேசினால் தான் இவரது தலைவர் பதவி தப்பும், என்பதால் இப்படி மட்டகரமாக பேசிக்கொண்டிருக்கிறாரா? பாஜக ஆர்எஸ்எஸ் கூட்டத்திடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும். #பாஜக_பரிதாபங்கள், என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

செந்தில் பாலாஜி
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து உள்ள ட்விட்டில், ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களென பெருமைப்படுத்தினார், நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள். பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே, என்று குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக செந்தில் பாலாஜி செய்தியாளர்களை தவறாக பேசிவிட்டதாக அண்ணாமலைதான் விமர்சனம் செய்து இருந்தார்.

தரகுறைவு
இந்த நிலையில்தான் அண்ணாமலை தற்போது செய்தியாளர்களை மிகவும் தரகுறைவாக பேசி உள்ளார். அதே சமயம் அமைச்சரை ஒருமையில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதற்கு முன்பே அண்ணாமலை செய்தியாளர்களை தவறாக பேசி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடியின் சென்னை வருகையின் சாலை நடுவில் பாஜக கொடிகளை நட்டது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் அளிக்காமல்... அண்ணாமலை அந்த செய்தியாளர்களை தாக்கி பேசினார்.

அறிவாலயம்
உங்களுக்கு அறிவாலயத்தில் இருந்து வர வேண்டிய 200 ரூபாய் வந்துவிடும் என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர் கேள்வி எழுப்ப எழுப்ப.. உங்களுக்கு 1000 ரூபாய் வந்துவிடும்.. 2000 ரூபாய் வந்துவிடும் என்று கூறிக்கொண்டே சென்றார் அண்ணாமலை. அண்ணாமலையின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் பல பத்திரிகையாளர்கள் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்தனர். இந்த நிலையில்தான் தற்போது அண்ணாமலை மீண்டும் செய்தியாளர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications