2019ல் என்ஐஏ விசாரித்த முபினை கண்காணிக்க தமிழக உளவுத் துறை தவறியதா?- செந்தில் பாலாஜி விளக்கம்
கோவை: 2019ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமையால் விசாரணைக்குள்படுத்தப்பட்ட ஜமேஷா முபினை தொடர்ந்து கண்காணிக்க தமிழக உளவுத் துறை தவறிவிட்டதா என்ற கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
கோவை உக்கடம் பகுதியில் ஈஸ்வரன் கோயில் தெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இவரது வீட்டை காவல் துறையினர் சோதனை நடத்தியதில் கோலி குண்டுகள், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் என்ஐஏ மாற்றி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியர், கமிஷனர்
இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரான், கோவை மாநகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காவல் துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலை கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து காவல் துறையினர் தகவல்களை வெளியிடுவதற்கு முன்பே அவர் வெளியிடுகிறார்.

விசாரணை
அவரும் ஒரு விசாரணை அதிகாரியாக இருந்தவர். இப்படித்தான் உயர் அதிகாரியின் அனுமதி இல்லாமல் பொதுவெளியில் தகவல் தெரிவிப்பாரா? மதுரையில் ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த வந்த போது இப்படித்தான் அரசியல் செய்தார்கள். அது போல் இந்த கோவை சம்பவத்திலும் பாஜக அரசியல் செய்ய நினைக்கிறது.

கார் வெடிப்பு சம்பவம்
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் காவல் துறை குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டனர். அது போல் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துவிட்டனர். தீபாவளி பண்டிகையின் போது கோவையில் பொதுமக்கள் யாரும் அச்சமின்றி கொண்டாடினர். தொழில் ரீதியாகவும் எந்த சுணக்கமும் இல்லை. இதை நீங்களே (ஊடகம்) பொதுமக்களிடம் கேட்கலாம்.

தேசிய புலனாய்வு முகமை
2019 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரால் ஜமேஷா முபின் சோதனை செய்யப்பட்ட போதிலும் தமிழக உளவுத் துறை அவரை கண்காணிக்க தவறி விட்டதா என கேட்கிறீர்கள். 2019 இல் என்ஐஏ விசாரணை நடத்திய போது அவர் மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என கூறிவிட்டது. இதற்கு மேல் என்னால் இந்த வழக்கிற்குள் செல்ல முடியாது. ஏன் என்றால் தற்போது வழக்கானது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என்றார்.

அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி
இந்த போட்டியின் போது அண்ணாமலை, பாஜக குறித்து செய்தியாளர்கள் செந்தில் பாலாஜியிடம் கேட்ட போது அவர் , அண்ணாமலையின் பெயரையோ கட்சியின் பெயரையோ கூறாமல் அந்த நபர், ஒரு கட்சியின் தலைவர், அந்த நபர் சார்ந்த கட்சி என்றுதான் குறிப்பிட்டார். அது போல் அனைத்து கட்சிகளையும் கூட்டி கோவை கார் வெடிப்பு குறித்து விளக்கமளிக்கலாமே என செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் தமிழகத்தில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான கட்சி நம் அரசு எடுத்த முடிவை பாராட்டியுள்ளார்கள். ஆனால் இதை திசை திருப்பி, பதற்றத்தை உண்டாக்க நினைப்பது ஒரே ஒரு கட்சிதான். ஒரு கட்சிக்காக மற்ற கட்சிகளை எல்லாம் உட்கார வைத்து விளக்கம் அளிப்பதா, அது மற்ற கட்சியினரை குற்றம்சாட்டுவது போல் இருக்காதா என கேள்வி எழுப்பினார் செந்தில் பாலாஜி.












Click it and Unblock the Notifications