கோவை 10 தொகுதிகளிலும் பாஜக ஜெயிக்கும்.. செந்தில் பாலாஜிக்கு வானதி சீனிவாசன் ஓபன் சேலஞ்ச்
கோவை: கோவையில் 10 தொகுதியிலும் 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றெடுப்பதை செந்தில் பாலாஜி பார்க்கத்தான் போகிறார் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் திட்டத்தின் கீழ் 200 ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமை வகித்து பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், கோவை மாவட்டத்தில் தெற்கு தொகுதியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றது. குறிப்பாக சாலை பிரச்சனை. எங்கு சென்றாலும் அதை சொல்லுகிறார்கள் என கூறிய அவர் சமீபத்தில் கோவை வந்திருந்த முதல்வர் 200 கோடி ரூபாய் சாலைகளுக்காக கொடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.
அந்த தொகையை விரைவில் பெற்று இங்கிருக்க கூடிய சாலை பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கும் கோரிக்கை வைத்துள்ளேன். ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு குறித்த பெரியசாமியின் கருத்து குறித்த கேள்விக்கு, கடந்த சில காலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் நேரடியாக மாநில தலைவர்களோ அல்லது முக்கிய தலைவர்களோ இதைப் பற்றி பேசாமல் அவர்கள் கட்சியில் இருக்கின்ற அடுத்த கட்ட தலைவர்கள் இதைப்பற்றி எல்லாம் பேசி வருகிறார்கள்.
அவர்களுக்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்பதற்காக அமைச்சர் அந்த கருத்தை தெரிவித்திருக்கலாம். பாஜக பொருத்தவரை கூட்டணியில் இருப்பவர்கள் சில சமயம் தேர்தலிலோ அல்லது வெற்றியிலோ மிகப்பெரிய பங்களிக்காவிட்டாலும் கூட அரசாங்கத்திலே அவர்களுக்கு பங்கு கொடுத்து அவர்களையும் ஒரு அரசோடு இணைத்து ஒரு மிகப்பெரிய கூட்டணி என்ற போதும் அந்த அரசாங்கத்தில் கூட கூட்டணி கட்சிகள் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு அவர்களையும் சேர்த்து அரசாங்கத்தை நடத்துவது என்பது பாஜகவின் வழக்கம்.
இது மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் இருந்து பாஜக பின்பற்றப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் மிகப்பெரிய தேர்தல் வெற்றியை பெற்று இருக்கிறோம். அங்கு தனி பெரும்பான்மையில் இருக்கக்கூடிய ஒரு தலைவருக்கு மாநிலத்தின் முதல்வர் பதவியை கொடுத்து அழகுபடுத்தியது பாஜக. திமுக கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் அரசாங்கத்தில் பங்கு கேட்பது என்பது தவறே கிடையாது. அவர்களுக்குரிய அங்கீகாரமும் மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து.
தவெக தலைவர் விஜய் தங்க மோதிரம் கொடுத்தது தொடர்பான கேள்விக்கு, அரசியல் கட்சிகள் ஒவ்வொருவரும் அவர்கள் கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு பரிசளிப்பது என்பது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் சிறந்த நடிகர் சிறந்த பண்பாளர் அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் நாங்கள் பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய கருத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சு.வெங்கடேசன் எம்பி மத்திய அரசாங்கத்தில் என்ன செய்தாலும், என்ன நல்ல காரியம் செய்தாலும் குறை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் நீங்கள் சொல்வது போல் மத்திய அரசின் பணிகளுக்கான தேர்வு இருந்தால் நிச்சயமாக அது பற்றிய தகவல்களை மத்திய நிதி அமைச்சரிடம் தெரிவிப்போம்.
யானைகள் புத்துணர்வு முகாம் என்பது கோவில் யானைகளுக்காக நடத்தப்படுவது. காட்டு யானைகள் மனிதர்களுடைய வாழ்விடங்களுக்கு வருவது போன்ற நிகழ்வுகளால் கோவை பகுதியில் அதிக பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளிடம் கடந்த மாதம் பேசி இருந்தேன்.
இதனை அறிவியல் பூர்வமாக பின்தொடர வேண்டும் என்பது முக்கியம். ஒரு பக்கம் யானை கேரிடாருகளுக்கு தனியாக வழி செய்கிறோம், அகழிகள் வெட்டுகிறோம். ஆனாலும் இப்போது மதுக்கரை அருகில் ரயில்வே துறை ட்ரோன் டெக்னாலஜி வாயிலாக யானைகள் பாதிப்பில்லாமல் செய்வதற்கு செய்கிறார்கள். மாநிலத்தின் வனத்துறையும் குறிப்பாக சென்சிட்டிவ் பகுதிகளை கண்டறிந்து புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வனவிலங்கு மனிதர்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.டட
யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்படாமல் திமுக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் என்பது மிகச் சிறப்பான ஒரு திட்டம். அது யானைகளுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தம், உடல் நலம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் அதில் இருக்கும். திமுகவினருக்கு கோவிலும் பிடிக்காது. கோவில் யானைகளும் பிடிக்காது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்குகளை தெரிவதற்கு நான் அவரின் வழக்கறிஞர் அல்ல. ஒவ்வொருவரும் பத்து தொகுதியை ஜெயிக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு அரசியல் கட்சியும் வேலை செய்கிறது. கோவையில் 10 தொகுதியையும் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றெடுப்பதை அவர் பார்க்கத்தான் போகிறார்.
இந்த 10 தொகுதியை வென்றெடுப்பது என்ற இலக்கை வைத்து பாஜகவும் வேலை செய்து கொண்டிருக்கிறது. எந்த கூட்டணி, எந்த நேரத்தில், எந்த கட்சிகள் என்பதை எல்லாம் எங்களுடைய கட்சியின் தேசிய தலைமை முடிவெடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications