“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி
கோவை: "கரூரில் இருந்து வந்துள்ள ரோபோக்களின் ப்யூஸை பிடுங்கி, பேட்டரியை கழற்றி அனுப்புவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். மக்களால் புறக்கணிக்கப்பட்டு, 2 தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு இழந்தவரின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. நான் 5 தேர்தல்களில் நின்று வெற்றி பெற்றுள்ளேன். யார் ரோபோ, யார் பேட்டரி என்று மக்களுக்கு தெரியும். அவர் கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர். அவரைப் பற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை." எனக் காட்டமாக பதில் கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூடியிருந்த மக்கள் மத்தியில் செந்தில் பாலாஜி பேசுகையில், "கோவையில் கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். ரூ.250 கோடி மதிப்பில் மாநகராட்சி பகுதிகளில் சாலை அமைத்துள்ளோம்.

என்னுடைய முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துள்ளேன். கோவைக்கு கூடுதல் கவனம் செலுத்துகிறோம். கோவை தெற்கு தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன். கோவையில் 10க்கு 10 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்ல வேண்டும். அதில் கோவை தெற்கு தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்கிற பெருமையை உருவாக்கி தர வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, "நாங்கள் ஒவ்வொரு பகுதியிலும் ஓட்டு கேட்க செல்லும்போது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டு வருகிறோம். சில இடங்களில் சமுதாயக் கூடம் கேட்கிறார்கள். மல்டி லெவல் கார் பார்க்கிங், வணிக வளாகம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர். அப்படிப்பட்ட மக்கள் கோரிக்கைகளை தொகுத்து எடுத்து கொண்டிருக்கிறோம்.
கோவை தெற்கு தொகுதிக்கு என்று மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் மக்கள் பிரச்சனைகளை தொகுத்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்தப் பணிகளை முன்னெடுத்து நிறைவேற்றுவோம். விரைவில் துணை முதல்வர் உள்ளிட்டோர் கோவையில் பிரசாரம் செய்வது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
கரூரில் இருந்து வந்துள்ள ரோபோக்களின் ப்யூஸை பிடுங்கி, பேட்டரியை கழற்றி அனுப்புவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். மக்களால் புறக்கணிக்கப்பட்டு, 2 தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு இழந்தவரின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
நான் 5 தேர்தல்களில் நின்று வெற்றி பெற்றுள்ளேன். யார் ரோபோ, யார் பேட்டரி என்று மக்களுக்கு தெரியும். அவர் கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர். ப்யூஸ் போன பல்பு, ஊடகங்கள் லைம் லைட்டில் தான் இருக்கிறார். மக்கள் அந்த நபரை விரும்பவில்லை. அவரைப் பற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை." எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக கோவையில் பேட்டி அளித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூரில் இருந்து 18 சுயேச்சைகளை அழைத்து வந்துள்ளார். பூத் ஏஜென்ட்கள் மூலம் கடைசி நேரத்தில் கலவரம் செய்ய தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர். இவர்களை கோவைக்குள் விடவே கூடாது.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கரூரை சேர்ந்த 18 சுயேச்சை வேட்பாளர்களும் திமுகவுக்கு தான் பிரச்சாரம் செய்கின்றனர். இவர்கள் எந்திரன் பட சிட்டி ரோபோ போல, சாலையில் நடந்து செல்கின்றனர். அந்த ரோபோக்களின் ப்யூஸை பிடுங்கி, பேட்டரியை கழற்றி கரூருக்கே அனுப்பிவிடுவோம்." எனப் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications