கோவையில் 16 வயது சிறுமியை சீரழித்த கும்பல்.. 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பு!
கோவை : கடந்த 2019 ஆம் ஆண்டு கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூங்காவில், 16 வயது சிறுமி ஒருவர் தனது உறவினருடன் பிறந்தநாள் கொண்டாடச் சென்றார். இரவு 9 மணியளவில் அவர்கள் வீடு திரும்பத் தயாராகும்போது, 7 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது.

அந்தச் சிறுமியின் உறவினரை தாக்கி, 16 வயது சிறுமியை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. பின்னர் மணிகண்டன் (30) கார்த்திக் (25), ஆட்டோ மணிகண்டன் (30), பிரகாஷ் (22), நாராயண மூர்த்தி (30), கார்த்திகேயன் (28), ராகுல் (21) ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, போக்சோ சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், மணிகண்டன் (30) கார்த்திக் (25), ஆட்டோ மணிகண்டன் (30), பிரகாஷ் (22), நாராயண மூர்த்தி (30), கார்த்திகேயன் (28), ராகுல் (21) ஆகிய 7 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications