கோவையில் கொடுமை.. 75 வயதான மாமியாரை பலாத்காரம் செய்ய முயன்ற 51 வயது கொடூர மருமகன்
கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் 75 வயதாகும் மாமியாரை மருமகனே பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குடிபோதையில் இருந்த மருமகன், இரவில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த மாமியாரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதன்பின் அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி போலீசாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 51 வயதாகும் இவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவருக்கு இளம் வயதில் ஒரு மகன் இருக்கிறார். இதன் காரணமாக மருமகன் மற்றும் பேரனுக்கு உதவியாக 75 வயதான மாமியார் அவர்களுடன் தங்கி இருந்துள்ளார்.

மருமகன் மற்றும் பேரனுக்கு சமைத்துக் கொடுத்து, வீட்டின் வேலைகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் மருமகன் மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. நேற்றிரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மணிகண்டன், இரவில் அவரின் அறைக்கு சென்று தூங்கி இருக்கிறார். இந்த நிலையில் நள்ளிரவில் எழுந்த மணிகண்டன், திடீரென மாமியார் தூங்கிய அறைக்குள் நுழைந்துள்ளார்.
தொடர்ந்து, 75 வயதானவர் என்றும் பாராமல் மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். இதனால் கண்விழித்த மாமியார் உடனடியாக கத்தி கூச்சலிட்டுள்ளார். இதன்பின் உடனடியாக மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த பேரன், உடனடியாக பாட்டியின் அறைக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தந்தை மணிகண்டனை சரமாரியாக அடித்து அங்கிருந்து வெளியேற்றி இருக்கிறார்.
இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அங்கு திரண்டிருக்கின்றனர். இதன்பின் மாமியாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மணிகண்டனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications