மொத்தமாக மாற போகுது கோவை.. ஆர்வம் காட்டும் தென் கொரிய நிறுவனங்கள்.. அடடே இது சூப்பரா இருக்கே
கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரமாக இருக்கும் கோவையில் பல முக்கிய நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. இதற்கிடையே தென் கொரியாவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் விவசாய துறை தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை,
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து மிக முக்கிய நகரமாகக் கோவை இருக்கிறது. மற்ற நகரங்களைப் போல இல்லாமல் கோவை ஒரு ஆல் ரவுண்டு நகரமாகவே இருக்கிறது.

ஒரு பக்கம் தொழிற்சாலைகள், மறு பக்கம் ஐடி நிறுவனங்கள் இருந்தாலும் விவசாயமும் கோவையில் மிக முக்கிய இடத்தை பிடித்தே இருக்கிறது. இன்னும் கோவை மாவட்டத்தில் பல இடங்களில் விவசாயம் தொடர்ந்து நடந்தே வருகிறது.
தென் கொரியா: இதற்கிடையே தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன், குறிப்பாக விவசாயத் துறையில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக விவ்வியோ குளோபல் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கால்வின் யி தெரிவித்தார்.
ஆர்வம்: இது தொடர்பாக அவர் பிரபல ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில், "தென் கொரியா தொழில்நுட்பத்தில் வலுவாக இருக்கிறது.. நாங்கள் இந்திய நிறுவனங்களுடன் தொழில்நுட்ப ரீதியாக இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம். இந்திய நிறுவனங்களில் படிப்படியாக முதலீடு செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இப்போது தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் சில நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அடுத்து தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் உடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளோம்" என்றார்.
கோவை கண்காட்சி: கோவை மாவட்ட சிறுதொழில் சங்கம் சார்பில் அங்கு நடந்த அக்ரி இன்டெக்ஸ் வர்த்தக கண்காட்சியில் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையுடன் தொடர்புடைய 16 தென் கொரிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் விவசாயம் சார்ந்து பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதில் உணவு பதப்படுத்தும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் பிரபல தென்கொரிய நிறுவனம், இந்த வர்த்தக கண்காட்சியில் இந்திய நிறுவனத்துடன் $5 மில்லியனுக்கு ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
கொரியா விவசாயத் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் இந்தியாவில் நான்காவது ஆண்டாகச் சோதனை திட்டங்களை நடத்தி வருகிறது.. வரும் காலங்களில் மேலும் பல இந்திய நிறுவனங்களுடன், குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இந்த நிறுவனம் இணைந்து செயல்படும் என்றே தெரிகிறது.
கோவையில் முதலீடு: தமிழ்நாட்டில் சென்னைக்கு மட்டுமே அதிக முதலீடுகள் வருவதாகவும் இதனால் மற்ற பகுதிகள் பெரியளவில் வளர்ச்சி அடைவதில்லை என்ற புகார்கள் இருந்து கொண்டே இருந்தன. ஆனால், இப்போது விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துவது சார்ந்த துறைகளில் தென்கொரிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சென்னையைத் தவிர்த்துப் பல இடங்களில் முதலீடு கிடைக்கும். குறிப்பாகக் கோவைக்கு நல்ல முதலீடுகள் வரும் என்பதில் சந்தேகமே இல்லை.
எந்தெந்த தென்கொரிய நிறுவனங்கள் முதலீடு செய்ய போகின்றன.. எவ்வளவு முதலீடு செய்யப் போகின்றன என்பது குறித்த தகவல்கள் இன்னும் சில காலத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications