"210 மிமீ மழை.!" போட்டு தாக்கிய கனமழை.. கோவையை குளமாக்கிய தென்மேற்கு பருவமழை.. பொதுமக்கள் செம ஹேப்பி
கோவை: தென் மேற்கு பருவமழை முடிய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், கோவையில் ஏற்கனவே 205 மிமீ மழை கொட்டி தீர்த்து உள்ளது.
இந்த ஆண்டு பருவமழை தொடங்கியது முதலே பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் பருவ மழை தொடங்கிய நிலையில், ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் உற்சாகத்தில் உள்ளனர். தென் மேற்கு பருவமழை காரணமாகக் கோவையில் வழக்கத்தை விட அதிகமாகவே மழை பெய்துள்ளது.

கோவை
கோவை நகரில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஜூன் மாதம் முதல் இதுவரை மட்டும் 205 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. பருவமழை முடிய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில். இந்தாண்டு கோவையில் 210 மி.மீ. அளவை தாண்டி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் 9.5 மிமீ மழையும், ஜூலையில் 86.8 மிமீ மழையும் பெய்துள்ளது,

210 மிமீ மழை
அதேபோல கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 104.2 மிமீ மழை பெய்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 26ஆம் தேதி ஒரு நாள் மட்டும் 59 மிமீ மழை பெய்துள்ளது. இது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழக பயிர் மேலாண்மை இயக்குநரகத்தின் பேராசிரியர் ராமநாதன் கூறுகையில், "ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழையில் 210 மிமீ மழை பெய்யும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். 1992 முதல் 2021 வரை சராசரியாக இந்த அளவுக்குத் தான் மழை பெய்துள்ளது" என்றார்,

கடந்த காலம்
கோவையில் அதிகபட்சமாக 2000ல் 417 மி.மீ மழையும், குறைந்த அளவாக 2016இல் 68.4 மி.மீ மழையும் பதிவானது. இது மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்குப் பெரியளவில் உதவியாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பெய்த மழையால் அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னர் மற்றும் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது.

போக்குவரத்து நெரிசல்
இதனால் லட்சுமி மில் மற்றும் ராமநாதபுரம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், நகரில் சில இடங்களில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் கோவையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

சிறப்பு திட்டம்
வாலாங்குளத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. நகர்ப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட இதுவும் முக்கிய காரணமாகும். மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கைத் தவிர்க்கும் வகையில் வாலாங்குளத்தில் இருந்து கால்வாயைத் தூர்வார 9 கோடி ரூபாய் செலவில் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கனமழை தொடர்ந்து வரும் நிலையில், மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications