அஜித் பக்கம் வண்டியை விட்ட வேலுமணி.. கோவையில் சல்லி சல்லியாக நொறுங்கும் தவெக
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. விஜய்யின் தவெகவை எதிர்க்க நடிகர் அஜித்குமார் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கோவையில் வேலுமணி நேரடியாக அஜித் ரசிகர்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்துள்ளார். ஜெயலலிதா மீது அஜித் பெரும் மரியாதை கொண்டவர். நாங்களும் மரியாதை வைத்துள்ளோம் என்று வேலுமணி ஆதரவு கேட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுகின்றார். தவெக வருகையால் அதிமுக வாக்கு அதிகம் பாதிக்கப்படும் என்று அவர் மிகுந்த கவலையடைந்துள்ளார். செல்லும் இடமெல்லாம் வேலுமணி, தவெகவுக்கு வாக்களித்தால் திமுக வெற்றி பெற்றுவிடும். தவெகவுக்கு அளிக்கும் வாக்கு திமுகவுக்கு அளிக்கும் ஆதரவாகிவிடும் என்று எச்சரித்து வருகிறார்.

வேலுமணி - அஜித் ரசிகர்கள்
இந்நிலையில் வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக செல்வபுரம் பகுதியில் நடிகர் அஜித் குமார் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், ரசிகர்களையும் நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடினார். எடப்பாடி பழனிசாமி அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பெரிய பிரச்சாரமாக முன்னெடுத்தனர். வேலுமணி ஒரு படி மேலே சென்றுவிட்டார்.
அவர் பேசுகையில், "புரட்சி தலைவி ஜெயலலிதா மீது அஜித் மிகப்பெரிய மரியாதை கொண்டிருந்தார். அடிக்கடி அவரை சந்திப்பார்கள். ஜெயலலிதா மறைந்த போது கூட அஜித் வெளிநாட்டில் இருந்தார். பிறகு சென்னை திரும்பி அவரின் சமாதியல் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார். எப்போதுமே, அஜித் மீது எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. நீங்கள் எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இப்போதுள்ள ஆட்சியை மாற்றப்பட வேண்டும்.
மீண்டும் அதிமுக ஆட்சி
நாம் ஆட்சியில் இருந்தபோது தான் கோவைக்கு ஸ்மார்ட் சிட்டி, மேம்பாலங்கள் உள்பட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதேபோன்ற நிலை மீண்டும் உருவாகும். நீங்கள் எல்லாம் ஆதரவு கொடுத்தால் பெரிய ஆதரவு உருவாகும். சட்டம் ஒழுங்கு இப்போது மோசமாக உள்ளது. காவல்துறை வேலையே செய்வது இல்லை. எடப்பாடி வந்த பிறகு அது சரி செய்யப்படும்.
சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி. நீங்கள் எல்லா பக்கமும் சென்று உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் எனக்கு ஆதரவு பெற்று தர வேண்டும். நன்றி வணக்கம்" என்றார். அஜித் ரசிகரிடம் வேலுமணி ஆதரவு கேட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications