எங்க வீட்டு கல்யாணத்துக்கு 7,000 ஆடு? பத்திரிகை கொடுத்தாலே Non Veg சாப்பிடமாட்டோம் -எஸ்.பி.வேலுமணி
கோவை: கல்யாண பத்திரிகை வைக்க ஆரம்பித்தாலே தங்கள் வீட்டில் அசைவம் சாப்பிடமாட்டோம் என்றும் இத்தகைய சூழலில் தங்கள் இல்ல திருமண விழாவுக்காக தாம் 7,000 ஆடுகள் வெட்டுவதாக கூறுவது கற்பனைக்குரியது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக 52ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சிக்கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய எஸ்.பி.வேலுமணி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், நீங்கள் தான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என்று கூறுகிறார்களே எனக் கேட்டார். இந்தக் கேள்வியை சிரித்துக்கொண்டே மிகவும் கூலாக எதிர்கொண்ட எஸ்.பி. வேலுமணி, இது திமுக ஐடிவிங்கின் வேலை என்றும் தங்களுக்கு ''எடப்பாடியார்'' தான் எல்லாமே எனவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி என்று கூட சொல்லாமல் ''எடப்பாடியார்''என்றே வார்த்தைக்கு வார்த்தை குறிப்பிட்டார் எஸ்.பி.வேலுமணி. தனது தந்தை காலம் முதல் அதிமுகவில் பரம்பரை பரம்பரையாக இருந்து வருவதாகவும் சிவசேனாவுக்கு ஏக்நாத் ஷிண்டே செய்தது துரோகம் எனவும் தெரிவித்தார். மேற்கொண்டு அந்த விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை என்றவர், தங்கள் இல்ல திருமண விழா பற்றி சில விளக்கங்களை அளித்தார்.
தங்கள் இல்லத்தில் நடைபெறும் கல்யாணத்திற்காக தாம் 7,000 ஆடுகள் வெட்டவிருப்பதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் கல்யாண பத்திரிகை வைக்க ஆரம்பித்தாலே தங்கள் வீட்டில் அசைவம் சாப்பிடமாட்டோம் என்றும் அப்படியிருக்கும் போது தாம் எப்படி ஆடுகளை வெட்டி விருந்து வைப்பேன் எனவும் வினவினார். கோவை பகுதியில் திருமணத்தின் போது சைவம் மட்டுமே விருந்தாக அளிக்கப்படும் என்றும் ஆனால் ஏதேதோ தன்னை பற்றி சிலர் கிளப்பிவிடுகிறார்கள் எனவும் எஸ்.பி.வேலுமணி வேதனைத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி தான் தனக்குத் தலைவர் என்றும் அவர் பின்னால் முழுமையாக இருப்பேன் எனவும் கூறிய எஸ்.பி. வேலுமணி, அதிமுகவில் ஏதாவது ஒரு குழப்பத்தை உருவாக்க முடியாதா என சிலர் பார்க்கிறார்கள் என திமுகவை சாடினார். திமுக நினைப்பது போல் எதுவும் நடக்கப் போறதில்லை எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications