SP Velumani: கோவை பற்றிய தயாநிதி மாறன் பேச்சு.. வாள் வீசும் வேலுமணி.. வரிந்து கட்டும் வானதி
கோவை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். கோவை மக்கள் குறித்து தயாநிதி மாறன் சொல்லிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. இதற்கு அதிமுக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவர் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வேலுமணி, வானதி உள்ளிட்டோர் கூறியுள்ளார் (SP Velumani).
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நம்பி வந்த யாவருக்கும் கொடுத்தது கோவை என்பதே உண்மை வரலாறு! "கோவை மக்கள் கெடுத்தார்கள்" என்று சொல்ல தயாநிதி மாறனுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?.

தீயசக்தி திமுக
உழைக்கும் மக்களான கோவை மக்களை, அதிகார மமதையில் இழிவாகப் பேசிய அவருக்கு எனது வன்மையானக் கண்டனம்! கோவை மக்களை இழிவுபடுத்துவதை ரசித்துக்கொண்டு சிரிக்கிறார் செந்தில் பாலாஜி. கோவை மாவட்ட மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறை இதுதான். தனது பேச்சுக்கு தயாநிதிமாறன், கோவை மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
திமுக-வின் கோவை வெறுப்பு என்பது புதிது அல்ல. கோவைக்கு திமுக எதையும் கொடுத்ததாக வரலாறு இல்லை. வருவதாக இருந்ததை எல்லாம் கெடுத்ததாக மட்டுமே வரலாறு உள்ளது.இந்த தீய எண்ணம் கொண்ட தீயசக்தி திமுக-விற்கு மீண்டும் ஒருமுறை தக்க தண்டனையைக் கொடுக்க கோவை மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
இதேபோல பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக கட்சி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கோவை மக்களைக் குறித்து மலினமாகப் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. பாசத்திற்கும் பண்புக்கும் பேர் பெற்று, பொருளாதார வளர்ச்சியில் உச்சங்கொண்டு, தேடி வருவோரையெல்லாம் வாழ வைக்கும் ஊர் கோவை.
தயாநிதி, செந்தில் பாலாஜி
தமிழகத்தின் தலைசிறந்த தொழில் நகரத்தைக் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், வாய்க்கு வந்தபடி மலினமாகப் பேசி சிரிப்பதை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் என்பதைத் தாண்டி, கோவை மண்ணின் மகளாகச் சொல்கிறேன்! கோவை மக்களை இழிவாகப் பேசிய தயாநிதி மாறனும், அந்த கொச்சைப் பேச்சை மேடையில் இருந்தபடியே சிரித்து வெகுவாக ரசித்த செந்தில் பாலாஜி உடனடியாக கோவை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
பரிசு நிச்சயம்
ஆதிகாலந்தொட்டே மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டு, கோவை மீது வெறுப்பை உமிழ்ந்து வரும் திமுக தலைமைக்கு வரும் தேர்தலில் மிகப்பெரும் தோல்வியைப் பரிசளிப்பர் கோவை மக்கள். அப்போது தெரியும் கோவை மக்களின் அருமை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications