அடுத்தடுத்த பெட்ரோல் குண்டு அட்டாக்.. கோவை, சேலம், ஈரோட்டில் என்ன நடக்கிறது? குவிக்கப்பட்ட போலீஸ்!
கோயம்புத்தூர்: பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது
பாஜக அலுவலகம், பாஜகவினருக்கு சொந்தமான இடங்கள் பலவற்றில் நேற்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கோவை சித்தாபுதூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. இந்த பெட்ரோல் குண்டை வீசியது யார் என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
பெரிய சதி? கோவை, பொள்ளாச்சி, ஈரோட்டை உலுக்கிய பெட்ரோல் குண்டு வீச்சு.. களமிறங்கிய
தொடர் சம்பவங்கள்
கோவையில் மாருதி என்ற துணிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த கடையின் நிர்வாகி பாஜக கட்சிக்காரர் என்று கூறப்படுகிறது. ஒப்பணக்கார வீதியில் இந்த கடை உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில் பாஜக பிரமுகரின் காருக்கு தீ வைக்கப்பட்டது. ஒரு கார் மற்றும் 5 இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். ஈரோட்டிலும் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கடை ஒன்றில் டீசல் குண்டு வீசப்பட்டுள்ளது.
என்ன நடக்கிறது
இது போக பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் நேற்று இரவு தாம்பரம் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சிட்லபாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சீதாராமன் வீட்டில் மர்ம நபர்கள் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணை
கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய தலைவர்களின் வீடுகள், கட்சி அலுவலகங்கள், அமைப்பின் தலைவர்களின் வீடுகள் என பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் புதிதாக செக் போஸ்ட் போடப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு
பைக்கில் செல்லும் நபர்கள், சந்தேகம் அளிக்கும் விதமாக சுற்றும் நபர்கள், வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள் என்று பலர் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள். முக்கியமாக கோவை புறநகர் பகுதிகளில் புதிதாக செக்போஸ்ட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த செக்போஸ்ட்களில் போலீசார் குவிக்கப்பட்டு, ஊருக்குள் வரும் நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் இந்த சம்பவம் காரணமாக கலவரம் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் அனைத்து முக்கிய சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சோதனை
திண்டுக்கல்லிலும் தாக்குதல் சம்பவம் காரணமாக அங்கும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு ஆர்ஏஎப் எனப்படும் அவசர ஆக்சன் படை பிரிவினர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சேலத்திலும் நேற்று காலையில் இருந்து போலீசார் ரோந்து பணிகளை செய்து வருகின்றனர்.இந்த பெட்ரோல் குண்டு தாக்குதல்களுக்கு பின் யார் இருப்பது? இதை வைத்து ஆதாயம் அடைய போவது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.