கோவை ஓட்டலில் அறை எடுத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து.. கல்லூரி மாணவிக்கு நடந்த பயங்கரம்
கோவை: கோவை ஓட்டலில் அறை எடுத்து தங்கி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அதை வீடியோ எடுத்து இளைஞர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பீளமேட்டில் கணபதிமாநகரைச் சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி லட்சுமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). லட்சுமி கோவையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வீட்டில் இருக்கும் போது தனது ஸ்மார்ட்போனில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார்
அப்படி செல்போனில் மூழ்கி இருந்த மாணவி லட்சுமிக்கு கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் மூலமாக போத்தனூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வினோத்குமார் (வயது 25) என்பவர் பழக்கம் ஆனார். 2 பேரும் அடிக்கடி செல்போன் மூலமாக பேசி வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே முதலில் நட்பு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இருவரும் பல இடங்களில் சுற்றியுள்ளனர்.

செல்போனில் வீடியோ
வினோத்குமார் கடந்த மார்ச் மாதம் மாணவியை கோவையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அப்போது மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அதனை குடித்த சிறிது நேரத்தில் மாணவி லட்சுமி மயக்கம் ஆனார். பின்னர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வினோத்குமார் அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டார்.

கட்டாய திருமணம்
மயக்கம் தெளிந்த மாணவி என்ன நடந்தது என்பது தெரியாமல் தன்னுடைய வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த சம்பவம் நடந்த சிறிது நாட்களில் வினோத்குமார் மாணவி லட்சுமியை நேரில் சந்தித்து , தான் எடுத்து வைத்து இருந்த வீடியோவை காண்பித்து கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி முடியாது என்று மறுத்துள்ளார். ஆனால் வீடியோவை லீக் செய்துவிடுவேன் என மிரட்டி கட்டாயப்படுத்தி பெற்றோர்களின் அனுமதி பெறாமல் லட்சுமியை திருமணம் செய்தார். அதன்பின்னர் 2 பேரும் அவரவர் வீட்டிற்கு சென்று தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.இதனிடையே பெற்றோருக்கு தெரியாமல் அவர்கள் திருமணத்தை மறைத்து வந்ததாக கூறப்படுகிறது,

கோபத்தில் காதலன்
தன்னுடைய காதலன் வினோத்குமார் தன்னை மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து மிரட்டி திருமணம் செய்ததால் அவருடன் பேசுவதையும், பழகுவதையும் மாணவி தவிர்த்துள்ளார். மெல்ல மெல்ல விலகி செல்வதை உணர்ந்த வினோத்குமார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து மாணவி லட்சுமியை பின்தொடர்ந்து வந்து தன்னுடன் வாழ வருமாறு வற்புத்தியுள்ளார். நீ என்னுடன் சேர்ந்து வாழாவிட்டால் என் செல்போனில் உள்ள ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என கூறி மிரட்டி வந்துள்ளார். ஆனால் மாணவி லட்சுமி சேர்ந்து வாழ மறுத்துவிட்டார்.

தப்பிய காதலன்
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டுக்கு சென்ற வினோத்குமார் தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அவர் மறுக்கவே ஆத்திரம் அடைந்த வினோத்குமார் மாணவியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் கூடவே அங்கிருந்து வினோத்குமார் தப்பி ஓடிவிட்டார். தாக்குதலில் காயம் அடைந்த மாணவி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Recommended Video

வழக்கு பதிவு
இது குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் மாணவி லட்சுமி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தாக்குதல்,. கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவியை இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து கட்டாய திருமணம் செய்த விவகாரம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications