மாஸாக நடந்து வந்த யுவன்! கோவையில் நடந்த இசை நிகழ்ச்சியில் கடைசி நேர களேபரம்! இத்தனை பேர் காயமா?
கோவை : கோவையில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் கூட்ட நெரிசலில் சிக்கி மாணவ மாணவிகள் மற்றும் போலிசார் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் உள்ள எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25வது ஆண்டை முன்னிட்டு கல்லூரியின் வளாகத்தில் உள்ள மைதானத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி மற்றும் பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த நிகழ்ச்சியைக் காண 12.00 மணிமுதல் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வந்தனர். அவர்களை மட்டும் நிகழ்ச்சி திடலில் அனுமதித்துவிட்டு, 12 மணிக்கு மேல் வந்த மாணவ மாணவிகள் 3000க்கும் மேற்பட்டோரை நிகழ்ச்சி திடலில் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா
இதனால் கோபமுற்ற மாணவர்கள் உள்ளே நுழைய முயன்ற போது தள்ளுமுள்ளு எற்பட்டுள்ளது. இதில் கேட் மற்றும் சுற்றுச் சுவரின் அருகே நின்றவர்களை தள்ளி கொண்டு உள்ளே செல்ல முயன்று உள்ளனர். அப்போது கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாரா மெடிக்கல் படிக்கும் மாணவி, கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி, கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் EEE இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஆகியோர் கீழே விழ அவர்களை ஏறி மிதித்துக் கொண்டு மாணவ மாணவிகள் உள்ளே நுழைந்துள்ளனர்.

மாணவிகள் காயம்
இதில் ஒரு மாணவிக்கு உடலில் முகம் மற்றும் நெஞ்சு,கைகள் ஆகிய பகுதிகளில் சிறு காயங்களும், மற்றொரு மாணவிக்கு வலது தோள்பட்டையிலும் இடது கண் அருகே ரத்த காயமும்,மேலும் மற்றொரு மாணவிக்கு இடது தோள்பட்டையும் இடது மணிக்கட்டுக்கு கீழே ரத்தக்காயமும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கல்லூரி ஆம்புலன்ஸ் மூலமாக சரவணம்பட்டி விசுவாசபுரம் சத்தி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடும் தள்ளுமுள்ளு
அதனைத் தொடர்ந்து கல்லூரியின் பிரதான நுழைவாயில் முன்பாக 1000 மாணவ மாணவிகள் ஒன்று கூடி உள்ளே செல்ல முற்பட்டபோது அங்கிருந்த கல்லூரியின் செக்யூரிட்டிகள் மற்றும் போலீசார் தடுத்தபோதும் அங்கிருந்த பிளக்ஸ் பேனர்களை தள்ளிவிட்டு உள்ளே சென்றதாக தகவல் கூறப்படுகின்றது. மேலும் அந்த வழியாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வந்த கார் உள்ளே சென்றபோது காருக்கு பின்னால் அங்கிருந்த மாணவர்கள் ஒன்றாக செல்ல முயன்றனர். அப்போது சரவணம்பட்டி சட்ட ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் பிலோமினா அவர்களை கீழே தள்ளி மிதித்தவாறு மாணவர்கள் உள்ளே சென்றதாக தகவல் கூறப்படுகின்றது.

கல்லூரி மீது புகார்
இதில் பிலோமினாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கல்லூரி ஆம்புலன்ஸ் மூலமாக மேற்கண்ட தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி தொடங்கிய போது மைதானத்தில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூச்சிலிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓடிய போது சில மாணவிகள் காயமடைந்தனர். கல்லூரி நிர்வாகத்தினர் முறையாக முன்னேற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்பதால் தான் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications