பரபர “பறவைக் காய்ச்சல்”.. தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களில் ஒரு வண்டி விடாமல் தீவிர சோதனை!
கோவை: பறவைக் காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவுவதை தடுக்க தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள பண்ணைகளில் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகி இறப்பது தொடர்ந்து வருகிறது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹெச்5என்1 எனப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸ் பறவைகளிடம் இருந்து மனிதா்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக, அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடும். காய்ச்சல், தலைவலி, தசைப் பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகளாக உள்ளன.
அண்டை மாநிலமான கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் பறவைக் காய்ச்சல் பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது. கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு, சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் முழுவதுமான சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
பாலில் கூட பாய்சன்! கறந்த பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸா? எச்சரிக்கை விடுத்த ஹூ.. என்னங்க சொல்றீங்க.!
இதேபோல, கோவை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைப் பகுதிகளான ஆனைகட்டி, வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்பட 12 சோதனைச் சாவடிகளில், சிறப்பு கால்நடைப் பராமரிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக அளவில் கோழிப்பண்ணைகள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications