அவிநாசியின் ஆசை நிறைவேறப் போகுது.. 305 பில்லர்களுடன் பிரம்மாண்டம்! கோவைக்கு இனி ஜாலி தான் போங்க!
கோவை: கோவை மாவட்ட மக்களின் நீண்டகால கனவு நிறைவேறப் போகிறது. தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் என்ற பெயரை பெற்ற கோவை அவிநாசி மேம்பாலம் அக்டோபர் 9ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைக்க உள்ளதோடு, அந்த பாலத்திற்கு ஜிடி நாயுடுவின் பெயரை சூட்டுவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் அவினாசி மேம்பாலத்தின் சிறப்புகள் என்ன? அது கடந்து வந்த பாதை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
கோவை மாநகரத்தின் போக்குவரத்து முதுகெலும்பாகக் கருதப்படும் அவிநாசி சாலை, நகர வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட சுற்று மாவட்டங்களை கோவையுடன் இணைக்கும் இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்குகின்றன.
அதேசமயம் கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விமான நிலையம், பெரிய மருத்துவமனைகள் ஆகியவை அதிகமாக அமைந்துள்ளதால், இந்த சாலை வழியில் போக்குவரத்து நெரிசல் நீண்ட காலமாக மக்கள் வாழ்க்கையை சிரமப்படுத்தி வந்தது.

கோவை மேம்பாலம் திறப்பு
இதனை சமாளிப்பதற்காக, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு, கடந்த அதிமுக ஆட்சியில் அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. உப்பிலிபாளையம் முதல் கோல்ட்வின்ஸ் வரை சுமார் 10.10 கிலோமீட்டர் தூரம் வரை இந்த மேம்பாலம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, ரூ.1,700 கோடி மதிப்பில் 2020ஆம் ஆண்டு பணிகள் தொடங்கின. தமிழ்நாட்டில் இதுவரை அமைக்கப்பட்ட மேம்பாலங்களில் நீளமானதாகும் இந்த அவிநாசி உயர்மட்ட பாலம், மொத்தம் 17.25 மீட்டர் அகலத்தில், 305 பில்லர்களுடன் கட்டப்பட்டுள்ளது.

அவிநாசி மேம்பாலம்
மேம்பாலத்தின் முக்கிய சிறப்பம்சமாக, வாகன ஓட்டிகள் எளிதாக ஏறவும் இறங்கவும் ஹோப் கல்லூரி, நவஇந்தியா, அண்ணா சிலை, கோவை விமான நிலையம் மற்றும் ரெசிடென்சி ஓட்டல் பகுதிகளில் ஏறும் மற்றும் இறங்கும் தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறைந்து, கோவை நகரத்திலிருந்து விமான நிலையம் மற்றும் தொழில்துறை மையங்களுக்கு செல்லும் பயணம் எளிமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1791 கோடி திட்டம்
அதிமுக ஆட்சி மாறி திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னரும், இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பொருளாதார சவால்கள் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் பணிகள் தாமதமானபோதிலும், தற்போதைய நிலையில் ரூ.1,791 கோடி மதிப்பில் 10.1 கிலோமீட்டர் தூரம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் முழுமையாக முடிவடைந்துள்ளது. மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த மேம்பாலத்தை 5 கிலோமீட்டர் தூரம் வரை நீட்டிக்கும் புதிய திட்டத்தையும் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் மிக முக்கியமான நகர வளர்ச்சி திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த அவிநாசி மேம்பாலம் நாளை மறுநாள் அக்டோபர் 9ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. அதற்காக முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை புரியவிருக்கிறார். திமுகவினர் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் முக்கியமான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை வளர்ச்சி திட்டம்
மொத்தத்தில், கோவை அவிநாசி சாலை மேம்பாலம் திறக்கப்படுவது, நகரத்தின் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மட்டுமல்லாமல், கோவையின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமான கட்டமாகும். இது, தொழில், கல்வி, சுற்றுலா மற்றும் மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது என்கின்றனர் கோவை வாசிகள்.












Click it and Unblock the Notifications