திருமாவளவனுக்கு நாங்க நேர்முக சங்கி.. விஜயும், சீமானும் மறைமுக சங்கி - தமிழிசை செளந்தரராஜன்
கோவை: யாரைப் பார்த்தாலும் திருமாவளவன் சங்கி என்று கூறிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடே சங்கி மயமாகிவிட்டது. வலதுசாரிகள் எல்லா பக்கமும் விரிவடைந்து கொண்டிருக்கின்றனர். இடதுசாரிகளுக்கு வேலை இல்லை என்பதை திருமாவளவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டுகிறார்கள். ஆட்சியைத் தக்கவைக்க திமுக கூட்டணி, ஆட்சியை பிடிக்க அதிமுக கட்சிகள் வியூகம் வகுத்து வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகின்றன.

எதை சொன்னாலும் ஆர்எஸ்எஸ்
கோவை மலுமிச்சம்பட்டியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழிசை செளந்தரராஜன் இன்று கோவைக்கு வந்திருந்தார். கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எந்தக் கருத்தை சொன்னாலும் ஆர்எஸ்எஸ் என்று கூறிவிடுகின்றனர்.
ஒருவேளை சங்கியோ..
திருமாவளவனுக்கு அவர் சங்கியோ, இவர் சங்கியோ என்று யாரைப் பார்த்தாலும் சங்கி என்று கூறிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடே சங்கி மயமாகிவிட்டது. பாரதியாரை கொண்டாடுபவர்களை எப்படி நீங்கள் கொண்டாடுவீர்கள் என கூறுகின்றனர். ஏனெனில் பாரதியாரை ஏற்கனவே பெரிய சங்கியாக சேர்த்துவிட்டனர். திருமாவளவனுக்கு சீமான் சங்கி, விஜய் சங்கி. நாங்கள் எல்லாம் நேர்முக சங்கிகள். மற்றவர்கள் எல்லாம் மறைமுக சங்கி. எங்கு பார்த்தாலும் சங்கிகள் தான்.
யாரும் கவலைப்படத் தேவையில்லை. வலதுசாரிகள் எல்லா பக்கமும் விரிவடைந்து கொண்டிருக்கின்றனர். இடதுசாரிகளுக்கு வேலை இல்லை என்பதை திருமாவளவன் புரிந்து கொள்ள வேண்டும். எதை எடுத்தாலும் சங்கி என்று கூறிக் கொண்டிருக்கிறார். மக்களிடம் அன்பாக பேசுபவர்கள் அனைவரும் சங்கிதான். விஜய் சங்கி, திருமாவளவன் சங்கி. நன்றாக பாட்டு பாடுகிறார்... அதனால் அவர் பாட்டு சங்கி. நாட்டின் கலச்சாரத்தை பேணி பாதுகாப்பவர்கள் அனைவருமே சங்கி தான்.
வெல்லும் தமிழ் பெண்கள்
நாங்களும்தான் வெல்லும் தமிழ் பெண்கள். வெல்லும் பெண்களாக இருப்பதை விட சொல்லும் பெண்களாக இருக்க வேண்டும். கனிமொழிக்கு நன்றி. வெல்லும் பெண்கள் திமுகவில் மட்டும் இல்லாமல் அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள் என்னும் வகையில் பதிவிட்டுள்ளார். மகாத்மா காந்தி திட்டத்திற்கு இவ்வளவு குரல் கொடுப்பவர்கள் 60 திட்டங்களுக்கு ராஜீவ் காந்தி பெயரையும் 30 திட்டங்களுக்கு இந்திரா காந்தி பெயரையும் தான் வைத்திருந்தார்கள்.
தமிழ்நாட்டில் கலைஞர் பெயரில் தான் திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். நெல்லுக்கு கூட கருணா என தான் பெயர் வைக்கிறார்கள். பெயர் போன கட்சியாக இல்லாமல் பெயர் வைக்கும் கட்சியாக இருக்கிறார்கள். தமிழ்நாடு Out of control என சொல்கிறார்கள் விரைவில் with in our control ஆக வரப் போகிறது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications