பாஜகவில் பாதயாத்திரை குஸ்தி? இங்கிட்டு வானதி சீனிவாசன்..அங்கிட்டு அண்ணாமலை ஆதரவாளர் கிளம்புகிறார்!
கோவை: தமிழ்நாடு பாஜகவில் பாதயாத்திரை இப்போது பலத்தை காட்டும் ஆயுதமாக உருவெடுத்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் கோவை மாவட்ட பாஜக தலைவரும் அண்ணாமலையில் தீவிர ஆதரவாளருமான உத்தம ராமசாமி, மருதமலை நோக்கி பாதயாத்திரை செல்கிறாராம்.
பாஜகவின் வியூகங்களில் எப்போதும் யாத்திரைகள் பிரதான ஒன்றாகவே இருந்து வருகிறது. 1990களில் அத்வானி நடத்திய ரத யாத்திரை வரலாற்றில் மறக்க முடியாதது. இந்தியாவில் பாஜக வலுவாக வேர்பிடிக்க காரணமாக இருந்தது அத்வானியின் ரத யாத்திரை.
இதேபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் பொதுவாக பாஜக தலைவர்கள் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த யாத்திரைகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் திடீரென வேல் யாத்திரையை தொடங்கினார். யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திவிட்டனர் என்ற ஒற்றை காரணத்துக்காக எல்.முருகன் வேல் யாத்திரையை நடத்தினார். இத்தனைக்கும் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகதான் அப்போது ஆட்சியில் இருந்தது. ஆனாலும் வேல் யாத்திரையை அதிமுக ஆட்சி அனுமதிக்கவில்லை. எப்படியோ போராடி வேல் யாத்திரையை நிறைவு செய்தார் எல்.முருகன். 2019 லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மத்திய இணை அமைச்சராகவும் பதவி பெற்றுவிட்டார் எல்.முருகன்.
இப்போதும் தமிழ்நாடு பாஜகவில் 3 யாத்திரைகள் பேசுபொருளாகி இருக்கின்றன. அண்ணாமலையிடம் ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கு ரசீது கேட்டது திமுக. அதற்கு பதிலாக, நான் பாதயாத்திரை போகப் போகிறேன். அப்போது வாட்ச் வாங்கியதற்கு ரசீது வெளியிடுவேன் என்றார். பின்னர் ஏப்ரல் 14-ந் தேதி முதல் பாதயாத்திரை செல்லப் போகிறேன் என அண்ணாமலை அறிவித்தார்.
அண்ணாமலை இப்படி அறிவித்த நிலையில் திடீரென கோவை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஒன்றரை ஆண்டுகள் கழித்து பாதயாத்திரை செல்கிறேன் என்கிறார் வானதி சீனிவாசன். ஆனால் தமிழ்நாடு பாஜகவின் தலைமையுடன் கொங்கு மண்டல பாஜக முட்டி மோதிக் கொண்டிருப்பது பட்டவர்த்தனமான ஒன்றுதான். கோவை பந்த் விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நீதிமன்றத்திலேயே இந்த வேறுபாட்டை பகிரங்கமாக சுட்டிக்காட்டி இருந்தார். அப்போது முதலே கோவை பாஜக தன்னிச்சையாகவே செயல்பட்டும் வருகிறது.
அதாவது கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் போது கோவை பாஜகவினர் பந்த் போராட்டத்தை அறிவித்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மாநில தலைமையை கலந்து ஆலோசிக்காமல் கோவை பாஜகவினர் பந்த் போராட்டத்தை அறிவித்துவிட்டனர் என நீதிமன்றத்திலேயே அண்ணாமலை கூறியிருந்தார். இது கோவை பாஜகவினரை கடுமையாக அதிருப்தி அடைய செய்தது.
இந்நிலையில் வானதி சீனிவாசன் பாதயாத்திரையை நிறைவு செய்ய இருக்கும் நிலையில் கோவை மாவட்ட பாஜக தலைவரான உத்தம ராமசாமி திடீரென மருதமலைக்கு யாத்திரை போவதாக அறிவித்துள்ளார். அண்ணாமலையில் மிக தீவிரமான ஆதரவாளர் உத்தம ராமசாமி. அவரது இந்த மருதமலை யாத்திரை என்பது வானதி சீனிவாசனுக்கு போட்டியானதுதான் என அவரது ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். இப்படி தமிழ்நாடு பாஜகவில் கோஷ்டி பூசலை வெளிப்படுத்துவதற்கு எல்லாம் ஆன்மீக பாதயாத்திரையையா பயன்படுத்துவது? என்பது அக்கட்சியில் எழுகிற இன்னொரு வேதனை குரலாகவும் இருக்கிறதாம்.