புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றது ஏன்?.. டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்
வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி குறைந்துள்ளது - டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி
கோவை: வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி குறைந்துள்ளது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான ஜோடிக்கப்பட்ட ஒரு வீடியோவை பீகார் மாநில பாஜக தங்களது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்றும் இது தமிழகத்தின் மீது களங்கம் விளைவிக்க வேண்டுமென்றே யாரோ கிளப்பிவிட்ட பொய் மூட்டைகள் என விமர்சனங்கள் எழுந்தன. அது போல் முதல்வர் ஸ்டாலினும் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

வீடியோ
அந்த வீடியோவில் தாக்கப்பட்டவர்கள் பீகாரை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விவகாரம் பீகார் மாநில சட்டசபையில் எதிரொலித்தது. இதையடுத்து பீகாரை சேர்ந்த அனைத்து கட்சிகள் கொண்ட குழு ஒன்று தமிழகத்தில் வந்து விசாரணை நடத்தியது. அது போல் அந்த மாநிலத்தின் கட்சியான லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தமிழகத்திற்கு வந்திருந்தார்.

வடமாநிலத் தொழிலாளர்கள்
இந்த நிலையில் அவர் வடமாநிலத் தொழிலாளர்களிடம் நடத்திய விசாரணையை வைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் பொய்யான வீடியோவை பரப்பியவர்களை கைது செய்ய தமிழக தனிப்படை போலீஸார் பீகார், டெல்லி விரைந்தனர். இந்த நிலையில் பீகாரை சேர்ந்த அமன்குமாரை கைது செய்தனர்.

வீடியோ
அது போல் இந்த பொய்யான வீடியோ தொடர்பாக நிறைய பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் குறித்து யாரேனும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார். இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

தமிழகத்தில் பாதுகாப்பு
இதை வைத்து தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாததால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கிறார்கள் என்பதையும் யாரோ கிளப்பிவிட்டனர். அவர்களிடம் கேட்ட போது யாரும் பயந்து கொண்டு செல்லவில்லை. சொந்த ஊரில் ஹோலி பண்டிகையை கொண்டாடவே செல்கிறோம் என்றும் தமிழக மக்கள் எங்களை தங்கள் குடும்ப உறுப்பினர் போல் நடத்துவதாகவும் தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தனர்.

தேசிய அளவில்
இந்த நிலையில் இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதால் கோவை சரவணபட்டியில் ஒரு ஆலையில் வடமாநில தொழிலாளர்களிடம் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தினார். இதையடுத்து டிஜிபி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடமாநில தொழிலாளர்கள்
வட மாநில தொழிலாளர்கள் பற்றி பதற்றமான வீடியோ வெளியிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட மாநில தொழிலாளர்கள் பற்றி போலியான வீடியோ வெளியிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகை கொண்டாடவே சொந்த ஊர்களுக்கு தொழிலாளர்கள் பயணம் செய்துள்ளனர். மற்றபடி அவர்கள் பயந்து கொண்டு எல்லாம் ஊருக்கு செல்லவில்லை. வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி குறைந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்களின் செல்போன் எண்ணில் இருந்து ஏதேனும் லிங்க் வந்தால் அதற்கு எதிர்வினைகளை ஆற்ற வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications