மேட்டுப்பாளையம்: சுவர் இடிந்த விபத்தில் இறந்த இரு குழந்தைகளின் கண்களை தானமாக கொடுத்த தந்தை
கோவை: மேட்டுப்பாளையத்தில் கருங்கல் சுவர் இடிந்த விபத்தில் பலியான இரு குழந்தைகளின் கண்களையும் தந்தை ஒருவர் தானமாக தந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் கடந்த திங்கள்கிழமை அன்று பெய்த கனமழையால் 20 அடி உயரத்திலான சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 3 வீடுகள் தரைமட்டமாகின. அந்த வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருபவர் செல்வராஜ். இவரது மனைவி லட்சுமி பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு நிவேதா, ராமநாதன் ஆகிய மகள், மகன் இருந்தனர்.

17 பேர் பலி
கல்லூரி படிக்கும் நிவேதாவும் 10ம் வகுப்பு படிக்கும் ராமநாதனும் தங்களது தாயின் தங்கையான சித்தியிடம் வளர்ந்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் சித்தி சிவகாமி வீட்டில் தூங்கினர். அப்போதுதான் கருங்கல் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் பலியாகிவிட்டனர்.

நிர்கதியாய் நிற்கும் செல்வராஜ்
அந்த 17 பேரில் நிவேதா, ராமநாதனும், சித்தி சிவகாமியும், அவரது மகள் வைதேகியும் அடங்குவர். ஏற்கெனவே மனைவியை இழந்த செல்வராஜ் தற்போது ஒரே ஆதரவான மகள், மகனையும் இழந்துவிட்டார். தற்போது யாரும் இல்லாமல் நிர்கதியாய் நிற்பதாக கதறி அழுகிறார் செல்வராஜ்.

நிவேதா ராமநாதன்
தனது மகன், மகள் ஆகியோரின் கண்களை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவமனையில் செல்வராஜ் தானம் அளித்துவிட்டார். தற்போது நிவேதாவும் ராமநாதனும் இறந்து 4 பேரின் வாழ்வில் ஒளியேற்றுவர்.

நெகிழ்ச்சி
சொந்தம் என சொல்லிக் கொள்ள செல்வராஜிக்கு யாரும் இல்லை. குடும்ப உறவுகளை எல்லாம் இழந்த சோகத்திலும் 4 பேருக்கு பார்வை கிடைக்க செல்வராஜ் உதவி செய்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications