மாட்டிறைச்சி சாப்பிடுவதாக டார்ச்சர்! ஆசிரியரை கைது செய்யாவிட்டால் போராட்டம் வெடிக்கும்! -அன்சாரி
கோவை: கோவையில் முஸ்லீம் மாணவி ஒருவரிடம் மாட்டுக்கறி சாப்பிடுவதால் உனக்கு திமிர் அதிகமாக இருக்கும் என்று கூறி அவமானப்படுத்திய ஆசிரியர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர்கள் இருவரை கைது செய்யாவிட்டால் போராட்ட களத்தை ஒருங்கிணைப்போம் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் கோவையில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாணவியும், அவரது பெற்றோரும் ஆரம்பக்கட்டத்தில் ஆசிரியர்கள் மீது புகார் கூறிய போதே, தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தளவுக்கு நிலைமை சென்றிருக்க வாய்ப்பில்லை.

கோவை துடியலூர் பகுதியில் உள்ள என்.ஜி.ஓ. நகர் அரசுப் பள்ளியில் படித்து வரும் 7ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர்கள் அபிநயா என்பவரும், ராஜ்குமார் என்பவரும் மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ , அப்ப உனக்கு திமிர் அதிகமாக தான் இருக்கும் எனக் கூறி மாணவி அணிந்திருந்த புர்கா மூலம் ஷூவை துடைக்க வைத்ததாக மாணவியின் பெற்றொர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் காவல்துறையினர், பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் என பலரது கவனத்திற்கும் சென்றுள்ளதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விடுத்துள்ள ட்விட்டர் பதிவு வருமாறு; ''மாட்டிறைச்சி சாப்பிடும் திமிரில் ஆடுகிறாயா? என கோவை துடியலூரில் 7-ஆம் வகுப்பு மாணவியை, அவமானப்படுத்தி செருப்பை துடைக்க வைத்த ஆசிரியை அபிநயா, தலைமையாசிரியை ராஜேஸ்வரி ஆகியோரை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். இல்லையேல் மனிதநேய ஜனநாயத கட்சி போராட்ட களத்தை ஒருங்கிணைக்கும் .'' இவ்வாறு தனது பதிவில் அன்சாரி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு சென்ற மாணவியின் பெற்றோர், பள்ளியில் தங்கள் மகளுக்கு என்னவெல்லாம் நடந்தது என்பது பற்றி விரிவான மனு ஒன்றை அளித்துள்ளதால் அதில் இடம்பெற்றுள்ள புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications