“நான் பாஜக முடிஞ்சத பாத்துக்கோ”.. விவசாய நிலம் மோசடி.. பூச்சி மருந்தை குடித்த விவசாயியின் மனைவி பலி
கோவை : கோவை அருகே விவசாய நிலத்தை விற்றுத் தருவதாக கூறி பாஜக நிர்வாகி பல லட்சம் ரூபாயை மோசடி செய்ததால் மனமுடைந்து விவசாய குடுமத்தினர் விஷம் குடித்த நிலையில், விவசாயியின் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே சீலக்கம்பட்டி பகுதியை சேர்ந்த கனகராஜ் அதே பகுதியில் உள்ள தனது 18 ஏக்கர் நிலத்தில் இருபது வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறார்.
நெல் கரும்பு வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு அவர் அவற்றை அறுவடை செய்து கோவையில் விற்பனை செய்வது வழக்கம்.

விவசாயி தற்கொலை முயற்சி
அவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் ஆன நிலையில் கனகராஜ் தனது மனைவியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கனகராஜ் வீட்டிலிருந்து வெளியே வராத நிலையில் அருகில் இருப்போர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கனகராஜ் அவரது மனைவி சுமதியும் பூச்சி மருந்து குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்,

மனைவி பலி
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சைப் பலனின்றி சுமதி உயிரிழந்தார். மேலும் கனகராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பாஜக நிர்வாகி ஒருவர் ஏமாற்றியதால் தான் கனகராஜும் அவரது மனைவி சுமதியும் விஷம் குடித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பாஜக நிர்வாகி மோசடி
வயதான காலத்தில் தனது 18 ஏக்கர் விவசாய நிலத்தை விற்க முடிவு செய்த கனகராஜ் நிலத்தை விற்பனை செய்ய வேண்டி அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகியான நந்த கோபால் என்பவரை அணுகியுள்ளார். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 18 ஏக்கர் நிலத்தின் அசல் பத்திரங்களை வாங்கிக் கொண்ட நந்தகோபால் நிலத்தை விற்று தராமலும் அசல் பத்திரங்களை திருப்பி தராமலும் இருந்துள்ளார். பல நாட்கள் அலைந்து திரிந்து நந்தகோபாலிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.

போலீசார் விசாரணை
கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் நந்தகோபாலிடம் கேட்ட போது தான் பாஜக நிர்வாகி என்றும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே கனகராஜும், அவரது மனைவி சுமதியும் விஷம் குடித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications