ஈஷா Vs சமூக ஆர்வலர்கள்.. கோவையில் வெடிக்கும் பாலியல் டாக்டர் விவகாரம்
கோவை: கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே உள்ள 10க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஈஷா யோக மைய மருத்துவக் குழுவின் மருத்துவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஈஷா யோக மையத்தினரிடையே இப்பிரச்னை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஈஷா எதிர்ப்பு கூட்டு இயக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், பேராசிரியர் காமராசு செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஈஷா அறக்கட்டளையில் பணிபுரியும் டாக்டர் சரவணன் மூர்த்தி சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மேல் விசாரணையை தொடராதது ஏன், காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் விசாரணையை விரிவுபடுத்தாததற்கு காரணம் என்ன. குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் கிராமப்புற பழங்குடி பகுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு மொபைல் கிளினிக் என்று சென்றுள்ளார். இது காவல் துறைக்கு நன்றாக தெரியும். அங்கு வேறு ஏதாவது பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளார்களா என்பதை ஏன் இன்னும் விசாரிக்கவில்லை.
மேலும், சுகாதாரத் துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதலின்படி பெண் மாணவர்களை பரிசோதிக்க ஒரு பெண் மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும். இந்நிலையில், இவர்கள் ஏன் பெண் மருத்துவரை நியமிக்காமல் இருந்தார்கள். கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம் சம்பவம், வால்பாறை கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை போன்ற முக்கியமான வழக்கு போன்று, இது ஏன் விசாரிக்கப்படவில்லை.
ஈஷாவில் பல பாலியல் பலாத்கார சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு FIR பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், புகார்தாரர் புகாரை வாபஸ் பெற்றதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு சிறுமி தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார். ஆனால், அது சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பின்பு ஒரு அங்குலம் கூட வழக்கு விசாரணை நடத்தப்படவில்லை.
பேராசிரியர் காமராசு பேசுகையில், என்னுடைய இரண்டு மகள்களையும் ஈஷாவில் இதுவரை பார்க்க முடியவில்லை. கடந்த வருடம் மகளுக்கு இனிப்பு காரம் கொடுத்ததை இப்போது கொடுத்ததாக பொய் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். நான் இளைய மகளை பார்க்க முடியவில்லை. மகளைப் பார்க்க வேண்டும் என நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு பதிவு செய்துள்ளேன். மேலும், பெற்றோர்களின் அனுமதியின்றி பெயர்களை மாற்றி வைத்துள்ளனர். ஈஷாவின் வற்புறுத்தலால் நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் அப்போதுதான் தங்களுடன் பேச முடியும் என மகள்களை வைத்து மிரட்டுகிறார்கள் என்று கூறினார்.
தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் இராமகிருட்டிணன் பேசுகையில், எந்தக் கட்சி பணம் கேட்டது என்று வெளிப்படையாகக் கூற வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கான நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கான விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
இதற்கிடையே, கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துகளை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈஷா யோகா மைய தன்னார்வ அமைப்பை சேர்ந்த தினேஷ் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினேஷ் கூறுகையில், ஈஷா யோகா மையம் சார்பில் மனு அளிக்க வந்துள்ளேன். ஈஷா யோகா மையம் செய்யும் பல்வேறு நன்மையான வேலைகளுக்கும், தொண்டுகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல காலங்களாக சிலர் பொய்யான அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
மேலும், அவர்களிடம் ஏதேனும் முகாந்திரம் இருந்தால் நீதிமன்றத்தையோ, காவல் துறையையோ அணுகி தீர்வு கண்டிருக்கலாம். ஒரு குழுவாக இணைந்து கொண்டு அவர்களது குழுவிற்கென்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். அந்த குழுவில் இருக்கும் பல பேரின் பின்னணி பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
மேலும், அவர்கள் எந்த ஒரு அடிப்படை ஆதாரம் இல்லாமல் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிடுகின்றனர். உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர். அரசாங்கத்தில் வகுத்திருக்கும் முறையான அணுகுமுறைகளை அவர்கள் பின்பற்றுவதில்லை. ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர் முகாமில் எழுப்பப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும் தீர்ப்பு வரும்போது முழுமையான விவரங்கள் தெரியவரும்.,
காமராஜ் என்பவர்தான் சமீப காலமாக தொடர்ந்து ஈஷா மீது அவதூறு பரப்பி வருகிறார். அவர்களின் இரண்டு மகள்களே ஈஷாவில் தன்னார்வலர்களாக உள்ளனர். காமராஜ் கடந்த வாரம்கூட இரு முறை வந்து அவர்களது மகள்களை சந்தித்து இனிப்புகள் வழங்கிச் சென்றார். ஆனால், அதே சமயம் காமராஜ் தான் மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கிறார். அவர்கள் வந்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் தங்களிடம் உள்ளன. ஈஷா மீது தற்போது குற்றம்சாட்டும் நபர்கள் எவரிடமும் எந்த ஒரு முகாந்திரமும், ஆதாரமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications