சந்தேகப்பட்டவர்களுக்கு எல்லாம் இன்று விடை காத்திருக்கு.. அடித்து சொல்லும் ஆதவ் அர்ஜுனா
கோவை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில், வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தலை சந்திப்பது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் உண்மையான கட்டமைப்பு என்ன என்பது குறித்து இன்று முழுமையாகத் தெரியவரும் என்றும் தவெக பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவையில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த விஜய்க்கு, விமான நிலைய வளாகத்தில் ஏராளமானோர் திரண்டு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

திறந்த வேனில் ஏறி நின்று, தொண்டர்களின் வரவேற்பை விஜய் ஏற்றுக் கொண்டார். உற்சாகத்தில் தொண்டர்கள் தவெக கட்சிக் கொடியை விஜயை நோக்கி வீசத் தொடங்கினர். அந்த கட்சிக்கொடிகளை அன்போடு பெற்று தனது கழுத்தில் அணிந்து கொண்டு, அவர்களை நோக்கி கையசைத்தார் விஜய்.
மாலை 3 முதல் 6 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் பத்து மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், நாளை 13 மாவட்டங்களைச் சேரந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த கருத்தரங்கில் வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான களப் பணிகள் மேற்கொள்வது குறித்தும், ஆட்சி மாற்றத்துக்கான செயல்பாடுகள் குறித்தும் விரிவாகப் பேசவுள்ளதாக அக்கட்சி வட்டாரம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக, திமுக போன்ற கட்சிகளுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகள் அதிக அளவில் இருப்பார்கள். இன்று நடைபெறும் கருத்தரங்கத்தின் மூலமாக தமிழக வெற்றி கழகத்தின் உண்மையான கட்டமைப்பு என்ன என்பது முழுமையாக தெரியவரும்.
மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கத்தில் வாக்குச் சாவடி முகவர்களுக்கு தேர்தலை எப்படிச் சந்திப்பது என்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்களின் பிரச்சனைகள் குறித்தும், தற்போதைய ஆட்சியில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், மக்களுடன் எப்படி சேர்ந்து பணியாற்றுவது என்பது குறித்து அரசியல் பயிற்சி அரங்கம் இன்று நடைபெறுகிறது. விஜய் சொன்னதுபோல மக்களோடு சேர், மக்களோடு வாழ் என்ற அடிப்படையில் மக்களிடம் செல்வதற்கான அரசியல் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
அதிமுக, திமுக என்ற இரண்டு பெரிய கட்சிகளுக்கு மத்தியில் மூன்றாவது கட்சியில் முதன்மையான கட்சி தமிழக வெற்றிக் கழகம் என்பது வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தெரியவரும். அதற்கான முதல் நாளாக இன்றைய நாளை கருதுகிறேன். வாக்குச்சாவடி முகவர்களுக்கு முறையான கருத்தரங்க அட்டவணைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 3 லட்சம் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ளோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications