இதுதான் சாதனை! அன்று வீட்டு வேலை.. இன்று பவர் லிஃப்டிங் வீராங்கனை.. 40 வயதில் சாதித்து காட்டிய பெண்!
கோயம்புத்தூர்: நாற்பது வயதுக்கு மேல் ஒரு பெண் என்ன செய்ய முடியும்? எதையும் செய்ய முடியும் என்கிறார் மாசிலாமணி. கோவையை சேர்ந்த இவர், வீட்டு வேலை செய்து வருகிறார். குடும்ப பொருளாதாரச் சூழலுக்காக வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். ஆனால் திருமணத்திற்கு முன்பு இருந்ததைப்போல் உடல் இல்லை. குழந்தைகள் பிறந்தபிறகு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டது. அதிகப்படியான உடல் எடை வேலைக்குத் தொந்தரவு கொடுத்துள்ளது.
ஒரு நாள் வீட்டு வேலை செய்யும் முதலாளியின் மகளிடம் " உடம்பைக் குறைக்க நீங்க ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்கிறீர்கள். நான் தினம் கஷ்டப்பட்டு வீட்டு வேலை செய்கிறேன். ஆனால் உடம்பைக் குறைக்க முடியவில்லை" என்று கவலையோடு கேட்டுள்ளார்.
அடுத்த நாள் மாசிலாமணி வாழ்க்கையில் பெரிய மாற்றம் நடக்கப் போகிறது என்பது அவருக்குத் தெரியவில்லை. முதலாளியின் மகள் அவரையும் ஜிம்மில் சேர்த்துவிட்டுள்ளார். இன்று மாசிலாமணி தமிழ்நாட்டில் பவர் லிஃப்டிங் வீராங்கனை.
டெலிகாம் தொழிலில் 10 லட்சம் நஷ்டம்; போர் போட்டு 20 லட்சம் நஷ்டம்! ட்ராகன் மூலம் வென்ற இளம் விவசாயி!
திருச்சியில் தமிழ்நாடு பவர் லிஃப்டிங் சங்கம் மாநில நடத்திய அளவிலான பவர்லிஃப்டிங் போட்டியில் கலந்து கொண்டு 63 கிலோ உள்ள பெண்களுக்கான பிரிவில் 77.5 கிலோ உள்ள எடையைத் தூக்கித் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் மாசிலாமணி. ஏறக்குறைய இப்போட்டியில் 500 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். இறுதியாக இவர் வென்றுள்ளார்.
வீட்டு வேலை செய்யும் சராசரி பெண் இன்று தமிழகத்தின் தங்க மங்கை. எப்படி நடந்தது இந்த மாற்றம்? மாசிலாமணியிடம் பேசினோம். கோயமுத்தூர் மக்களுக்கே உரித்தான அழகான தமிழில் பேசினார்.
"பத்து வருஷமாக வீட்டு வேலைக்குப் போகிறேன். குழந்தைகள் பிறந்த பிற்பாடு உடல் எடை கூடிவிட்டது. குறிப்பா 2009இல் கர்ப்பப்பையை எடுத்த பிறகு அதிகமா எடை கூடிவிட்டது. எனக்கு அந்த உடம்பை வைத்து வீட்டு வேலை செய்வதில் சிரமம் இருந்தது. பசங்களை ஸ்கூலுக்கு கூட்டிப் போய் விடும்போது அங்க உள்ள பிள்ளைகள், 'என்ன உங்க அம்மா இவ்வளவு குண்டா இருக்காங்க'னு கேட்பதா என் பிள்ளைகள் சொல்லுவாங்க. அப்போதுதான் நானும் உணர ஆரம்பித்தேன்.
என்ன செய்யலாம்னு யோசித்தபோதுதான் நான் வீட்டு வேலை செய்யும் முதலாளி மகளிடம் கேட்டேன். அவர் உடனே என்னை 'டான்ஸ் கிளாசுக்கு வரச் சொன்னார். என்னால் இந்த வயசுல டான்ஸ் ஆட முடியாது சொன்னேன். உடனே ஜிம்முக்கு போக சொன்னாங்க. உடனே குறைத்துவிடலாம்னு சொன்னார்.
ஆனால் என் வீட்டுக்காரர் சம்மதிக்கவில்லை. அந்தப் பெண்ணே வீட்டுக்கு வந்து என் கணவரிடம் பேசினார். அந்தப் பெண்ணே செலவு செய்து ஜிம்மில் சேர்த்துவிட்டார். அங்க போன பிறகு எனக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. ஜிம்முல எனக்குப் பயிற்சி கொடுத்த சிவக்குமார்தான் எனக்குச் சரியான வழிகாட்டியாக இருந்தார்" என ஏதோ இளம் பெண்ணைப் போலப் பேசுகிறார் மாசிலாமணி.
இவருக்கு மூன்று மகள்கள். அதில் ஒரு மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. ஒரு மகள் 11 வகுப்பு படிக்கிறார். மேலும் அக்கா மகளையும் எடுத்து வளர்த்து வருகிறார் இந்தத் தங்க மங்கை.
சர்ச் சபையில் இஸ்லாமியப் பெண்! – மதங்களை மீறிய ஒரு மனிதநேயம்
இவர் 5 வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். இவருக்கு 99இல் திருமணம் நடந்துள்ளது. உடற்பயிற்சிக்காகச் சென்ற இடத்தில் எப்படி பவர் லிஃப்டிங் செய்ய ஆரம்பித்தீர்கள். கணவர் அதற்குச் சம்மதித்தாரா? எனக் கேட்டால், "இல்லைங்க. அவர் முதல்ல சம்மதிக்கல. அப்புறம் என்னை ஜிம்முல சேர்த்துவிட்ட பெண்ணிடம் போய் சொன்னேன். அவரும் சம்மதிக்கல. 'உங்க கணவர் சொல்வதை கேட்டுக்கோங்க. ஏதாவது பிரச்சினை ஆகிவிட்டால் என்ன செய்வது?" என மறுத்தார். அவரை எப்படியோ சம்மதிக்க வைத்து என் கணவரிடம் அனுமதி வாங்க வைத்தேன். இப்போது நான் திருச்சியில் தங்கம் வென்ற பிறகு என் கணவர் அதிகம் சந்தோஷமாக இருக்கிறார். 'உன்னால் எவ்வளவு முடியுமோ செய்'னு ஊக்குவிக்கிறார் என்கிறார் மாசிலாமணி.
இப்போது இந்தச் சாகச பயணத்தில் மாசிலாமணி தன் மகள் தரணியையும் இணைத்துக் கொண்டுள்ளார். அவர் அவர் 47 கிலோ எடைப் பிரிவில் 72.5 கிலோ எடையைத் தூக்கி வெண்கலம் வென்றுள்ளார். இப்போது தாயும் மகளும் தென்னிந்திய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.
இவரது கணவர் ரமேஷ் ஒரு கூலித் தொழிலாளி. ஆகவே வீட்டின் பொருளாதார சுமையைப் பகிர்ந்து கொள்ள வேண்டி மாசிலாமணி வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். அதன் மூலம் மாதம் 4 ஆயிரம் வரை சம்பாதித்துள்ளார்.
வீட்டு வேலை செய்யும் மாசிலாமணி இப்போது தங்க மங்கையாக மாறி இருக்கிறார். இப்படி நடக்கும் என்று நினைத்துப் பார்த்தீர்களா என்றோம். "நிஜமா இல்லைங்க. முதல்ல என்ன ஜிம்முல சேர்த்துவிட்ட பூர்ணிமா பொண்ணுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இந்தப் பெண் இல்லையென்றால் நான் இல்லை. அடுத்து பயிற்சியாளர் சிவக்குமார். நான் முன்பு 70 கிலோ மேல இருந்தேன். இப்போது 60கிலோ கீழ் இருக்கிறேன். முன்பு போல இல்லை. உற்சாகமாக மாறி இருக்கிறேன். முன்னால் 'நீ போய் என்ன செய்ய போறே?'னு கேட்டவர்கள். இந்த வெற்றிக்குப் பிறகு எனக்கு வாழ்த்து செய்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்" என்கிறார் மாசிலாமணி.
வீட்டு வேலை செய்யும் இந்த 40 வயது பெண்மணி இன்று விருது மங்கையாக மாறி இருக்கிறார் என்றால் சும்மாவா?