கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. வானதி சீனிவாசன் பேட்டி
கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
Recommended Video
கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
இதனிடையே தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு வாக்களித்த வந்தார். வரிசையில் நின்று வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

வாக்களிப்பது அவசியம்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜனநாயகத்தில் வாக்களிப்பது தலையாய கடமை எனத் தெரிவித்தார். மக்கள் பணியில் சமரசம் செய்யாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், வருங்கால தலைமுறை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு வாக்களிப்பது முக்கியம் என்பதை உணர்ந்து மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கோவை தெற்கு
கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியில் உள்ள கமல்ஹாசன் சென்னையில் தனது வாக்கை செலுத்திய நிலையில் தற்போது கோவை வந்துள்ளார். அவர் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஆய்வு செய்து வருகிறார்.

சாலை மறியல்
இதனிடையே கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் டோக்கன் கொடுத்து பணம் விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களோடு சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications