பாஜகவுக்கு 20 தொகுதி... அண்ணாவுக்கும் ஜெ.வுக்கும் துரோகம் செய்த அதிமுக- கோவை ராமகிருஷ்ணன்
கோவை: பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருப்பது அண்ணாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் அதிமுக செய்துள்ள துரோகம் என்று தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் சாடியுள்ளார்.
Recommended Video
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் கோவை கு. இராமகிருட்டிணன் கூறியதாவது:
நூறு ஆண்டுகளாக போராடி பெற்ற சமூக நீதி, மாநில உரிமைகள், கல்வி வேலைவாய்ப்பு போன்றவை தற்போது பாஜக அரசால் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு துணை போய் கொண்டிருக்கிறது.
இந்த பாஜக அரசை ஒழிப்பதற்கும் அதிமுக அரசை ஒழிப்பதற்காகவும் வருகின்ற சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக அரசை அளிக்க முடியும்.
தமிழகத்தில் மதசார்பற்ற ஆட்சியை மலர செய்ய முடியும். பாஜகவுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியதே அண்ணாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் செய்த துரோகம். பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் முனைப்புடன் செயல்பட்டு பல்வேறு யுத்திகளுடன் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வோம்.
இவ்வாறு கோவை கு. ராமகிருட்டிணன் கூறினார்.