திமுக அரசை மிரட்ட சாதிய ரீதியாக தமிழ்நாட்டை பிரித்து குளிர்காய நினைக்கும் பாஜக.. கோவை ராமகிருட்டிணன்
கோவை: மாநில உரிமைகளை கேட்கிற தமிழகத்தின் திமுக ஆட்சியை மிரட்ட சாதிய ரீதியாக தமிழ்நாட்டை பிரித்து குளிர்காய நினைக்கிறது பாஜக என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக கோவை ராமகிருட்டிணன் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு என்றால் இவர்களுக்கு கசக்கிறது.. ஆனால் கொங்குநாடு என்றால் இனிக்கிறதா?
இந்திய ஒன்றியத்தில் மாநில உரிமைகளை கேட்கும் வலிமையான அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ளது. உரிமைகளை கேட்பவர்களின் வலிமையை குறைப்பதற்கு யூனியன் பிரதேசங்கள் என்ற செய்தியை பரப்பி, திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டப் பார்க்கிறார்கள்.
எட்டு ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி கொங்கு மண்டலத்தில் சிறு குறு தொழில்களை நலிவடைய செய்தது, கொங்கு மக்களுக்கு எதிராக ஒன்றியத்தில் ஆட்சி செய்து கொண்டு சாதிய ரீதியாக தமிழ்நாட்டை பிரித்து குளிர்காய பார்க்கிறது.
ஒரு பக்கம் *ஒரே நாடு_ ஒரே ரேஷன் கார்டு* என்று பேசிக் கொண்டு ஒரு மாநிலத்தில் ஒரு மொழி பேசுகின்ற மக்களை பிளவுபடுத்துகிற சதியை பிஜேபி செய்து வருகிறது.
இது போன்ற மயக்க பிஸ்கட்டுக்கு கொங்கு மண்டல மக்கள் மயங்க மாட்டார்கள். தமிழ்நாட்டை பிளவுபடுத்துகிற எந்த சதியையும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
இவ்வாறு கோவை ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications