விஜய்யின் வண்டியில் தாவ முயன்ற தவெக தொண்டர்! ஓங்கி குத்துவது போல மிரட்டிய பவுன்சர்.. அடுத்து சம்பவம்
கோவை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று இரண்டாவது நாளாக கோவையில் நடக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்றார். முன்னதாக நேற்று போலவே இன்றும் ரோடு ஷோ நடத்திய போது விஜய்யின் பிரசார வாகனம் மீது தொண்டர்கள் ஏற முயன்றனர். அப்போது பாதுகாப்புக்கு நின்ற பவுன்சர் அவரை ஓங்கி குத்துவது போல் மிரட்டினார்.
தமிழகத்தின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். ஆளும் திமுக, எதிர்கட்சியான அதிமுகவிற்கு நிகராக கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ள விஜய், அதற்கான பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.

விஜய்யின் ரோடு ஷோ
அதன் ஒரு கட்டமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்தும் பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார். முதல்கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கோவை மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் கருத்தரங்கு நேற்று கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் தொடங்கியது. கருத்தரங்கில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். கோவை ஏர்போர்ட்டில் இருந்து கருத்தரங்கு நடைபெறும் இடத்திற்கு திறந்த வேனில் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது வழி நெடுக தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பாதுகாப்புக்கு கூடுதல் பவுன்சர்கள்
ஆர்வ மிகுதியில் விஜயின் வாகனத்தின் மீது தவெக தொண்டர்கள் சிலர் ஏறினர். இதனால், நேற்று ரோடு ஷோவின் போது அவ்வப்போது பரபரப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று 2 வது நாளாக பூத் கமிட்டி கருத்தரங்கு நடக்கும் நிலையில், விஜய் இன்றும் பங்கேறுள்ளார். விஜய்யை பார்க்க கருத்தரங்கு நடைபெறும் கல்லூரி பகுதியில் கடும் வெயிலிலும் காலை முதலே தவெக தொண்டர்கள் குவிந்தனர்.
அதோடு, விஜய் தங்கி உள்ள ஹோட்டல் பகுதியிலும் தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரண்டனர். 2-ஆம் நாள் கருத்தரங்கில் பங்கேற்க வந்த விஜய் இன்றும் திறந்த வேனில் ரோடு ஷோ நடத்தினார். நேற்று தவெக தொண்டர்கள் சிலர் ஆர்வமிகுதியில் ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் இன்று விஜய்யின் பாதுகாப்புக்கு கூடுதல் பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். திறந்த வேனில் விஜய் அருகிலேயே பவுன்சர்கள் சிலர் நின்றனர்.
ஓங்கி அடிப்பது போல் மிரட்டிய பவுன்சர்
தவெக தொண்டர்கள் விஜய்யை நோக்கி பூக்களை வீசி வரவேற்பு அளித்தனர். இதற்கிடையே விஜய்யின் பிரசார வாகனத்தில் சில தொண்டர்கள் இன்றும் ஏற முற்பட்டனர். அப்போது, வாகனத்தில் நின்ற பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். அந்த வகையில் தவெக தொண்டர் ஒருவர் பிரசார வாகன வண்டியில் ஏற முயன்றார்.
அப்போது பவுன்சர் அவரை கீழே இறங்க கூறினார். ஆனாலும் மீறி அந்த தொண்டர் வாகனத்தில் ஏற முற்பட்டதால் ஓங்கி அடிப்பது போல மிரட்டினார். இதையடுத்து அந்த தொண்டர் இறங்கி விட்டார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications