2வது நாளாக கோவையில் விஜய்.. ஹோட்டல் முன்பாக குவிந்த தவெக தொண்டர்கள்.. மிரள விடும் பவுன்சர்கள் படை!
கோவை: தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் இரண்டாவது நாளாக கருத்தரங்கில் பங்கேற்கிறார். இதையொட்டி விஜய் தங்கியுள்ள ஹோட்டல் முன்பாக ஏராளமான தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்தும் பணியில் தவெக தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார். முதல்கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.

கோவை மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் கருத்தரங்கு நேற்று கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் தொடங்கியது. இந்தக் கருத்தரங்கில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார்.
முன்னதாக பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கில் பங்கேற்பதற்காக நேற்று காலை விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார் விஜய். கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது. மேலும் விமான நிலைய வளாகத்திலிருந்த பொருட்களும் தவெக கட்சியினரால் சேதப்படுத்தப்பட்டது.
மேலும், விமான நிலையத்தில் இருந்து தான் தங்கும் விடுதிக்கு திறந்த வேனில் சென்றார் விஜய். விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த தவெகவினர், சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டிச் சென்றுள்ளனர். இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக தவெக-வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக பூத் கமிட்டி கருத்தரங்கு நடக்கும் நிலையில், விஜய் இன்றும் பங்கேற்கிறார். இதையொட்டி, கருத்தரங்கு நடைபெறும் கல்லூரி பகுதியில் கடும் வெயிலிலும் காலை முதலே குவிந்து வருகிறார்கள் தவெக தொண்டர்கள். அதோடு, விஜய் தங்கி உள்ள ஹோட்டல் பகுதியிலும் தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர்.
வாகனங்கள் வெளியே செல்லும் வழியில் நின்று இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என விடுதி ஊழியர்களும் காவல்துறையினரும் அறிவுரை வழங்கி வருகின்றனர். எனினும் வழி விடாமல் தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இந்நிலையில், அங்கு கருப்பு உடை அணிந்த பவுன்சர்கள் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications