ஜிபேவில் 2 ஆயிரம்.. கஞ்சா வியாபாரிகளை எஸ்கேப் ஆகவிட்ட போலீஸ்.. கோவையில் கோட்டைவிட்ட அதிகாரிகள்
கோவை: கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு உதவியதோடு, அவர்களிடம் இருந்து ஜிபே மூலமாக 2 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிய இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐடி கம்பெனிகள் அதிகம் உள்ள பகுதிகள், கல்லூரிகள் அதிகம் உள்ள பகுதிகளைக் குறிவைத்து இந்த கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிகாரிகள் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் அதிக அளவில் தங்கியிருக்கும் பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் மேற்கொண்ட சோதனையின்போது கஞ்சா, கஞ்சா ஆயில், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாநகரில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கணேசன் மற்றும் முத்துக்குமார் என்ற இருவரைப் பிடித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கஞ்சா வியாபாரிகளான கணேசன், முத்துக்குமாரிடம் மேற்கொண்ட விசாரணையில் தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து கோவைக்கு கஞ்சா கடத்தி கொண்டு வரும் கும்பலை இவர்கள் இந்த இருவரின் மூலம் பிடிக்க போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால், தென்மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தும் கும்பல் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பியது. சரியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் எப்படி அந்த கஞ்சா கும்பலுக்கு பிடிபடாமல் தப்பித்தனர் என்பது போலீஸாருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எப்படி அவர்களுக்குத் தெரிந்திருக்கும், யார் மூலம் தெரிந்திருக்கும் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சி தகவல் வெளியானது. பணியில் இருந்த காவலர்களிடம் செல்போனை வாங்கி தென்மாவட்டத்தில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த கும்பலிடம் கணேசன், முத்துக்குமார் அலர்ட் செய்திருப்பது தெரியவந்தது. போலீசாரிடமே செல்போனை வாங்கி போலீசார் பிடிக்க திட்டமிட்டிருக்கும் தகவலை சொல்லி இருக்கும் சம்பவம் தெரியவந்தது.
போலீஸ் பிடியில் இருந்த இரு கஞ்சா வியாபாரிகளிடம் 2 ஆயிரம் ரூபாயை ஜிபே மூலம் வாங்கிக் கொண்டு, பணியில் இருந்த போலீசாரே செல்போனை கொடுத்து உதவியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள் ரவிசேகர் மற்றும் மாயசுதாகர் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து துணை ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டார்.
இளைஞர்கள் பலரும் போதைக்கு அடிமையாகி குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், பொறுப்புமிக்க பணியில் உள்ள காவலர்களே கஞ்சா வியாபாரிகளுக்கு உதவியுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications