உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்ற விமானத்தில்! போதை பயணிகள் செய்த அலப்பறை.. என்ன பண்ணிருக்காங்க பாருங்க
கோவை: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்ற விமானத்தில் குடி போதையில் இரண்டு பயணிகள் செய்த காரியம் மொத்த பயணிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து சென்ற விமானத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வழக்கு ஒன்றின் போது நீதிபதிகள் இந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்கள். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
விமானங்களில் வரம்பு மீறி பயணிகள் நடந்து கொள்ளும் சம்பவங்களுக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவருக்கு விமான பயணத்தின்போது மோசமான அனுபவம் கிடைத்துள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:-

கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் டெல்லி திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் விமானத்தில் ஏறியதும், மறுநாள் விசாரிக்க வேண்டிய வழக்குகள் குறித்த விவரங்களை பார்க்க வேண்டிய பணி இருந்துள்ளது.
இதனால், இருவரும் தனித்தனியே இருந்துள்ளனர். விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் விமானத்திற்குள் ஒரே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நீதிபதிகள் அமர்ந்து இருந்த இருக்கைக்கு சில அடி தூரத்தில் இருந்த விமானத்தின் டாய்லட் கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருந்துள்ளது. விமானத்தின் டாய்லட்டிற்கு சென்ற பயணி ஒருவர் இதை கவனித்து கதவைதட்டி பார்த்துள்ளார்.ஆனால், திறக்கவில்லை
அப்போதே அங்கு மது போதையில் வந்த மற்றொரு பயணி, விமான பயணிகளுக்கு வழங்கப்படும் கவரில் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதனால் கழிவறை பக்கம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பயணிகள் அனைவரும் அங்கிருந்து நகர்ந்தனர். அரை மணி நேரம் ஆகியும் டாய்லட் கதவு திறக்கப்படவில்லை என்பதால் மீண்டும், கதவை தட்டி பார்த்தனர்.
ஆனால் பயணிகள் நீண்ட நேரம் கதவை தட்டி பார்த்தும் மூச்சு பேச்சு இல்லை. இதனால், பரபரப்பான பயணிகள் கதவை உடைக்குமாறு விமான சிப்பந்திகளிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே இருக்கும் பயணி என்ன நிலையில் இருக்கிறாரோ எனக் கருதி திறக்க விமான சிப்பந்திகள் மாஸ்டர் கீ இருந்தும் திறக்க தயங்கியிருக்கிறார்கள். ஆனால் வேறு வழியின்றி கதவை உடைத்து பார்த்த போது, மது போதையில் டாய்லட்டிற்குள் அந்த பயணி துங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
இதனைக் கண்டு பயணிகள் அனைவரும் தலையில் அடிக்காத குறையாக புலம்பி விட்டு சென்றுள்ளனர். பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவத்தை நேற்று விசாரணையின் போது நீதிபதிகள் சுட்டி காட்டியிருக்கிறார்கள். விமானத்தில் நடந்த விஷயத்தை விசாரணையின் போது சுட்டிக்காட்டி பேசியிருக்கும் நீதிபதிகள், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதுமையான ஆலோசனைகளுடன் விமான போக்குவரத்து ஆணையம் வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications