கோவையை பதறவைக்கும் நகைப் பறிப்பு.. அடுத்தடுத்து 2 பெண்களிடம் கைவரிசை.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
கோவை: கோவையில் நகைப் பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு பெண்களிடம் பட்டப் பகலில் நகைப் பறிப்புச் சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகளவில் நடைபெற்று வரும் போர் போன்றவை காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை 1 லட்சத்தை தொடும் நிலைக்குச் சென்றுள்ளதால் எளிய மக்களுக்கு தங்கம் என்பது எட்டாக் கனியாக உள்ளது. இதற்கிடையே நகைப் பறிப்பு சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, கோவை மாவட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள், குழந்தைகளை தனியாக பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெண்கள், சாலைகளில் நடந்து செல்லும் பெண்கள், முதியவர்களைக் குறிவைத்து தொடர் நகைப் பறிப்புச் சம்பங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கோவையில் நகையை அணிந்து செல்லவே பெண்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தங்கம் என நினைத்து கவரிங் நகையை 2 பெண்கள் கழுத்தில் இருந்து அறுத்துச் சென்ற மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலரும் தங்க நகையைத் தவிர்த்து கவரிங் நகையை அணியத் தொடங்கியுள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் இரு பெண்களிடம் அடுத்தடுத்து நகைப் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டனர். குளத்துப்புதூர் அருகே புவனேஸ்வரி (30 ) என்ற பெண் நேற்று காலை 10:30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் புவனேஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறித்து மின்னல் வேகத்தில் சென்றனர்.
அதைத்தொடர்ந்து, குளத்துப்பாளையத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள கேடிகே மில் பகுதியில் 35 வயதான முத்துசலட்சுமி என்ற பெண் செல்போன் பேசிக்கொண்டு காலை 11.30 மணியளவில் நடந்து சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் முத்துலட்சுமி கழுத்தில் இருந்த நகையை பறித்துச் சென்றனர்.
ஆனால், இதில் பெரிய டிவிஸ்டாக இரு பெண்கள் அணிந்திருந்த நகையு கவரிங்காம்.. தங்க நகைகள் என நினைத்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் நகைப் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். நல்வாய்ப்பாக இரு பெண்களும் காயங்களின்றி தப்பித்தனர். பட்டப் பகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஆனைமலை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 பேர் கொண்ட தனிப்படை அமைத்து காவல் துறையினர் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளில் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications