கோவை- நாகர்கோவில் ரயிலில் பயங்கரம்.. மேல் படுக்கை முறிந்து விழுந்து விபத்து.. சிறுவன் படுகாயம்!
கோவை: ரயிலில் மேலே உள்ள பெர்த் திடீரென விழுந்ததில் கீழே படுத்திருந்த சிறுவனுக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் சிறுவனின் நெற்றியில் இதனால் காயம் ஏற்பட்ட போதிலும் உரியச் சிகிச்சை அளிக்கவில்லை என்று பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் பொதுமக்கள் பலரும் விரும்பி பயணிக்கும் பொது போக்குவரத்து ஆப்ஷனாக ரயில்வே இருக்கிறது. இதன் காரணமாகவே ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

ஒப்பீட்டளவில் ரயில்கள் சற்று பாதுகாப்பானது என்றாலும் சமீப காலங்களில் நடந்து வரும் ரயில் விபத்துகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
மேல் படுக்கை: இதற்கிடையே அப்படியொரு மோசமான விபத்து தான் இப்போது நடந்துள்ளது. ரயிலின் மேல் படுக்கை கீழே விழுந்து ஏற்பட்ட இந்த விபத்தில் சிறுவன் காயமடைந்துள்ளான். கோவை - நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் படுக்கை வசதி கொண்ட எஸ் 7 பெட்டியில் உள்ள கீழ் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த சிறுவன் மீது மேலே இருந்த படுக்கை விழுந்து விபத்துக்குள்ளானது.
ரயிலின் மேல் படுக்கை விழுந்து ஏற்பட்ட இந்த விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் எந்தவொரு சிகிச்சை கூட அளிக்கவில்லை என்று சிறுவனின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
என்ன நடந்தது: கோவையைச் சேர்ந்த இந்த தம்பதி, கோவை நாகர்கோவில் ரயிலில் ஏறியுள்ளனர். அவர்கள் ரயிலில் ஏறிக் கொஞ்ச நேரத்திலேயே இந்த விபத்து நடந்துள்ளது. இரவு 11.40 மணியளவில் மேல் படுக்கையைத் தயார் செய்தபோது, அந்த பெர்த்தை தாங்கிப் பிடித்த இரு இரும்புக் கொக்கிகள் அறுந்து விழுந்துள்ளன. இதில் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், ரயில்வே அதிகாரிகள் உரியச் சிகிச்சை கூட அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முதலில் கோவில்பட்டியில் உரியச் சிகிச்சை தராத நிலையில், மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து சிறுவனின் தாய் கூறுகையில், "இந்த விபத்து குறித்து டிடிஆர் யாரிடமும் சொல்லவில்லை.. ஸ்டேஷன் மாஸ்டர், ரயில்வே போலீஸ், மருத்துவக் குழு என யாரிடமும் விபத்து குறித்துச் சொல்ல மறுத்துவிட்டார். மதுரை ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் டிடிஆர் ரயிலில் இருந்து இறங்கச் சொன்னார். வேறு எதையும் அவர் சொல்லவில்லை. அங்கு ரயில் நிலையத்தில் ஒருவர் மட்டுமே இருந்தார். மருத்துவர் கூட இல்லை" என்று வேதனையுடன் கூறினார்.
பெற்றோர் புகார்: இந்தச் சம்பவம் குறித்துப் பெற்றோர் புகார் அளித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தைக்கு ரயிலில் காயம் ஏற்பட்ட நிலையில், அதற்கான சிகிச்சை கூட அளிக்கப்படவில்லை என்று குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன செய்யலாம்: ரயிலில் செல்லும் போது இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டால்.. அதுவும் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் சமாளிப்பது ரொம்பவே கடினம். இதுபோன்ற நேரங்களில் உடனடியாக 138 அல்லது 139 ரயில்வே எமர்ஜென்சி நம்பரை தொடர்பு கொண்டு உங்கள் புகாரை அளிக்கலாம். அல்லது சமூக வலைத்தளங்களிலும் ரயில்வே பக்கங்களை டேக் செய்து புகார் அளிக்கலாம். உங்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அடுத்த முறை ரயிலில் செல்லும் போது எமர்ஜென்சி என்றால் உடனடியாக இந்த எண்களுக்குக் கால் செய்யலாம்.












Click it and Unblock the Notifications