கோவை வடக்கில் வானதிக்காக குடும்பமே களத்தில்… கணவர், மகன்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது வெற்றிக்காக அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாகத் தேர்தல் களத்தில் இறங்கித் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரம், வாக்குறுதிகள், பரப்புரை என அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தாலும், கோவையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கோவையின் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது.

கோவையில் திமுகவை வெற்றி பெற வைப்பதற்காக இந்தமுறை செந்தில் பாலாஜியை நேரடியாக களமிறக்கியுள்ளனர். கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வானதி சீனிவாசன், இந்த தேர்தலில் கோவை வடக்கில் போட்டியிடவுள்ளார். கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், வலது கால் வீக்கம், வலி காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப் பதிவிற்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், வானதிக்கு பதிலாக அவரது மகன் தேர்தல் பணியை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசன் தொகுதியில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று குடியிருப்பு வாசிகளிடம் சென்று, கடந்த ஐந்து ஆண்டுகளில் வானதி சீனிவாசன் செய்த மக்கள் பணிகளை எடுத்துக் கூறி, மீண்டும் தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் குறைகளைக் கேட்டறிந்த அவர், வானதி விரைவில் குணமாகி உங்கள் சேவையைத் தொடருவார் என உறுதி அளித்தார்.
மறுபுறம், வானதி சீனிவாசனின் மகன்களான ஆதர்ஷ் மற்றும் கைலாஷ் ஆகிய இருவரும் இளைஞர் படையுடன் இணைந்து தொகுதி முழுவதும் வீதி, வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்து வருகின்றனர்.
ஆதர்ஷ் முக்கிய சந்திப்புகள், இளைஞர்களைச் சந்தித்துத் தாமரைக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கைலாஷ் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் முதியோர்களைச் சந்தித்துத் தனது தாய்க்கு ஆதரவு கோரி வருகிறார். வானதி சீனிவாசன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கணவரும், மகன்களும் இணைந்து தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவது கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், கோவை வடக்கில் வானதி சீனிவாசனின் குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் இந்தத் தீவிர பிரச்சாரம் தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications