அடடே! இது தமிழக அரசியல் களமா..காலில் காயம்பட்ட கமல் குணமடைய வாழ்த்து கடிதம் அனுப்பிய வானதி சீனிவாசன்
கோவை: காலில் அடைந்த கமல்ஹாசன் விரைவில் குணம் பெற வாழ்த்து தெரிவித்து கோவையில் அவருக்கு எதிராக போட்டியிடும் வானதி சீனிவாசன் கமலுக்கு பழக்கூடையும் தனது வாழ்த்து கடிதத்தையும் அனுப்பிவைத்தார்.
Recommended Video
கோவையில் நடைப்பயிற்சியின்போது காலில் காயம் அடைந்தார் கமல்ஹாசன். தற்போது தான் தங்கி இருக்கும் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார்.
பரபரப்பில் கோவை
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதன்முதலாக தேர்தல் களம் காண்கிறார். இவருக்கு எதிராக பாஜகவி ன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார். இதனால் கோவை தெற்கு தொகுதியில் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது.
கமலுக்கு காயம்
இந்த நிலையில் கமல்ஹாசன் இன்று காலை பூ மார்க்கெட் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டவாறு பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பலர் அவருடன் பேசவும், செல்பி எடுத்துக் கொள்ளவும் முந்தியடித்துக் கொண்டனர். ஆர்வமிகுதியில் கூட்டத்திலிருந்த சிலர் கமலின் காலை மிதித்து விட்டனர்.
ஓய்வு எடுத்து வருகிறார்
சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் அடிபட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற கமல் சிகிச்சை எடுத்துக் கொண்டார். காலில் வீக்கம் இருப்பதால் ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் இன்றைய பிரச்சாரத திட்டங்களை ரத்து செய்த கமல்ஹாசன் தான் தங்கியுள்ள விடுதியிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.
வானதி சீனிவாசன் வாழ்த்து
இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் ,கமல்ஹாசன் விரைவில் குணம் பெற்று மீண்டு வர வாழ்த்து தனது வாழ்த்து கடிதத்துடன் பழக்கூடை ஒன்றையும் கமலுக்கு அனுப்பி உள்ளார். இதனை பாஜகவின் மாவட்ட தலைவர் நந்தகுமாரிடம் கொடுத்து கமல்ஹாசனுக்கு அவர் அனுப்பி வைத்தார்.
தமிழகத்தில் வித்தியாசம்
பிரச்சாரக் களத்தில் எதிரெதிர் துருவங்களாக உள்ள கமல்ஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் இடையே அனல்பறக்கும் காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால் அதையெல்லாம் கடந்து கமல்ஹாசனுக்கு வானதி வாழ்த்து தெரிவித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் வித்தியாசமாக அமைந்துள்ளது.