கொங்கு மண்டலம் உங்களை மன்னிக்காது ஸ்டாலின்.. வெடிக்கும் வானதி சீனிவாசன்
கோவை: ஜிஎஸ்டி பற்றி பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கைப் பார்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். கொங்கு மண்டலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மன்னிக்காது என்று தெரிவித்துள்ளார்.
கோவை, கொடிசியாவில் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர்களிடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, “ உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ என்று வானதி சீனிவாசனைக் குறிப்பிட்டு எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க.

இந்த அம்மா வருவாங்க. ஜிலேபி சாப்பிடுவாங்க. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஒரே பில்லில் ஒரு குடும்பத்துக்கு வித்தியாச வித்தியாசமான ஜிஎஸ்டி போடுவதால் மக்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அதற்குள் க்ரீம் வைத்தால் 18% ஜிஎஸ்டி வருகிறது. குறைத்தால் எல்லாவற்றிற்கும் குறையுங்கள். தயவுசெய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது.” என்று கூறினார்.
அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதற்கு நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். இந்நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில், நிர்மலா சீதாராமன் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோருடன் அன்னபூர்ணா சீனிவாசனும் இருக்கிறார்.
அப்போது, அவர் நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எழுந்து நின்று கைகூப்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் பாஜகவின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாட்டுப் பயணத்தை முடித்து வந்த முதல்வர் ஸ்டாலினும் இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 'ஜி.எஸ்.டி. குறித்த தொழிமுனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று' என்று கூறியிருக்கிறார்.
கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் தொழில்கள் நசிந்து வருவதை அறிந்து அதை காப்பற்றவே நிர்மலா சீதாராமன் கோவை வந்தார். ஆனால், அவரது முயற்சிகளுக்கு திமுக அரசு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. அதற்கு நேர்மாறாக பிரச்னையை திசைதிருப்பி, மத்திய நிதியமைச்சர் செய்த நல்ல செயல்களை மக்களிடம் இருந்து மறைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
திமுக அரசின் அபரிமிதமான மின் கட்டண உயர்வாலும், சொத்துவரி, பதிவு கட்டண உயர்வாலும் 30 சதவீத குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, கோவையின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற முறையில், மத்திய நிதியமைச்சருடன், தொழில்முனைவோர்கள் நேரடியாக சந்திக்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன். தொழில்முனோர்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த கோரிக்கைகள், ஆலோசனைகளை நிர்மலா சீதாராமன் பொறுமையுடன் கேட்டு பதிலளித்தார்.
இந்நிகழ்ச்சி பெரும் வெற்றிபெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அப்போது நடந்த சாதாரண நிகழ்வை, பெரிதாக்கி, அரசியல் ஆதாயம் தேட தி.மு.கவும், அதன் கூட்டணி கட்சிகளும் முயற்சித்து வருகின்றன. கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். கோவையின் தொழில் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். கொங்கு மண்டலம் திமுக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் மன்னிக்காது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications