அண்ணாமலைக்கு முன்பாக டெல்லி பறந்த வானதி.. “அது என் வேலை இல்லங்க”: பட்டென வந்த கேள்விக்கு பளிச் பதில்
கோவை: இன்று டெல்லி சென்றார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டெல்லி சென்று பாஜக மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், வானதி டெல்லிக்குச் சென்றுள்ளார்.
பேரறிஞர் அண்ணா குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துப் பேசியது அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு வழிவகுத்தது. இதனைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக தலைவர்கள் பாஜக மீது விமர்சனம் செய்து வந்தாலும், பாஜக தரப்பில் அமைதி காக்கப்பட்டு வருகிறது. கூட்டணி தொடர்பாக பாஜக தேசிய தலைமை முடிவு செய்யும் என அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெறவிருந்த "என் மண், என் மக்கள்" பாதயாத்திரையை ஒத்திவைத்த அண்ணாமலை இன்று டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசனும் டெல்லிக்கு சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் வானதி சீனிவாசன் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் வானதி சீனிவாசனிடம் இந்த பயணம் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு வானதி சீனிவாசன், "வழக்கமான பணிகளுக்காகவே டெல்லி செல்கிறேன். இன்று மாலை மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருப்பதால் வேட்பாளர் தேர்வு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக செல்கிறேன். நீங்க நினைப்பது போல எதுவும் கிடையாது.
நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூட்டணி முறிவு குறித்து மேலிடத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ததாக ஊடகங்களில் செய்தி வருகின்றது. அந்த மாதிரி எதுவும் நடந்து இருக்கிறதா என எனக்கு தெரியாது. அது என் வேலையும் அல்ல. மகளிர் அணி தலைவராக, எம்.எல்.ஏவாக எனது பணிகளை செய்து கொண்டு இருக்கிறேன். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி வருகிறாரா என்பது பற்றியும் எனக்கு தெரியாது" எனத் தெரிவித்தார்.
அதிமுக பாஜக கூட்டணி தொடருமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்தபடி கிளம்பி சென்றார் வானதி சீனிவாசன். அண்ணாமலை இன்று தேசிய தலைவர்களைச் சந்திக்க டெல்லி செல்லவுள்ள நிலையில், வானதி சீனிவாசன் டெல்லிக்குச் சென்றுள்ளது அரசியல் பார்வையாளர்களை கவனிக்க வைத்துள்ளது.
வரும் அக்டோபர் 3ஆம் தேதி சென்னையில் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டு அடுத்தகட்ட திட்டங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications