தென் கைலாயம்.. வெள்ளியங்கிரி மலையேற தடை.. சேகர்பாபுவிற்கு கடிதம் எழுதிய வானதி சீனிவாசன்
கோவை: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். பக்தர்களுக்கு தேவையான உதவிகளையும் பாதுகாப்புகளையும் வனத்துறை சார்பில் அளித்திட வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெள்ளியங்கிரி மலை கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் ஆகும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை தென்கயிலை என்று அழைக்கப்படும் ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் வெள்ளியங்கிரி என்ற பெயர் பெற்றது.

இந்த மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடையது. அதாவது கடல் மட்டத்திலிருந்து 5000 அடி ஆகும். இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்கள் உள்ளிட்டவை உள்ளன.
வெள்ளியங்கிரி மலைக்கு கோவை மட்டுமின்றி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் சித்ரா பவுர்ணமி வரை கோவிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் மலையேற்றத்திற்கு வனத்துறை தடை விதித்தது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி. இம்மலையில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் ஏழு மலைகளை தாண்டி சிவபெருமானை தரிசித்து வருகினறனர்.
தற்சமயம் பிப்ரவரி மாதம் என்பதால் பல்வேறு பகுதியிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர் ஆனால், தற்பொழுது பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களை மலை எற அனுமதிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் பாதுகாப்புகளையும் வனத்துறை சார்பில் அளித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications