சி.பி.ராதாகிருஷ்ணனால் தமிழகத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை.. கணபதி ராஜ்குமார் ஓபன்
கோவை: துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்தவரான சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் பி.சுதர்சன ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தலுக்கான மக்களை மாநிலங்களை உறுப்பினர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் என்றும், அவரால் தமிழகத்திற்கு எந்த பிரயோஜனமும் கிடையாது என்றும் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 14 ஆவது துணை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

இந்தியா கூட்டணி சார்பில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தெலங்கானாவை சேர்ந்தவருமான பி.சுதர்சன ரெட்டியும் போட்டியிடுகிறார். துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான மாதிரி வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது.
துணை குடியரசுத் தலைவர்களுக்கான தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதியானவர்கள். இந்தியா கூட்டணி சார்பில் மாதிரி வாக்கெடுப்பு இன்று மதியம் 2.30 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்காக கோவை நாடளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, கோவை நாடளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இன்று அனைவரும் டெல்லி செல்கிறோம். எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து இன்று பயிற்சி அளிக்க உள்ளனர். நாளை அனைவரும் வாக்களிக்க உள்ளோம்.
இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு தான் வாக்களிக்க உள்ளோம். பாஜக வேட்பாளர் தமிழர் என்பதால் எப்படி வாக்களிக்க முடியும். தற்போதைய ஒன்றிய அரசு தமிழர்களுக்காக என்ன செய்தது. இது போன்ற அலங்கார பதவி கொடுப்பது ஊரை ஏமாற்றும் செயல்.
சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். ஆனால் அவரால் தமிழகத்திற்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. பாஜகவிற்கு மெஜாரிட்டி உள்ளது, ஆனால் அவர்களது ஓட்டும் எங்களுக்கு வரலாம் என்று எதிர்பார்ப்பு உள்ளது. கொள்கை அடிப்படையில் எங்கள் தலைவர் எடுக்கும் முடிவையே நாங்கள் கேட்கிறோம்.












Click it and Unblock the Notifications