கேரளாவில் பெரிய பிரச்சினையாமே..எல்லையில் காத்திருக்கும் ஆபத்து..! அலர்ட் ஆகும் தமிழகம்.. என்னாச்சு?
கோவை: கேரள மாநிலத்தில் பேர்ட் ஃபுளு எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருவதை தொடர்ந்து தமிழ்நாடு கேரள மாநில எல்லைகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுகாதார துறையும் கால்நடை பராமரிப்பு துறையும் இணைந்து அனைத்து வாகனங்களிலும் மருந்து தெளித்த பின்னரே தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது.
கொரோனாவாக இருந்தாலும் சரி பறவை காய்ச்சல் பன்றிக் காய்ச்சலாக இருந்தாலும் சரி கேரள மாநிலத்தில் இருந்து பரவுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் வாத்து கோழி பண்ணைகள் இருப்பதால் அடிக்கடி பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது ஆலப்புழா பகுதிகளில் வாத்து கோழி பண்ணைகளில் பறவைகள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக அடுத்தடுத்து புகார்கள் கிளம்பின. இதனால் பறவை காய்ச்சல் தமிழகத்திலும் பரவலாம் என அஞ்சப்படுகிறது.
பறவைக் காய்ச்சல்: ஏற்கனவே கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சலும் பன்றிக் காய்ச்சலும் ஏற்பட்ட போது எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழகத்தில் பாதிப்புகள் இல்லாத வண்ணம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் தற்போதும் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல தமிழக எல்லைகளிலும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தீவிர சோதனை: வடக்காடு, வாளையார், ஆனைகட்டி, மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், செம்பனம்பாதி, நடுப்புணி, ஜமீன் காளையாபுரம், கோபாலபுரம், வீரப்ப கவுண்டன் புதூர் உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்பு குழுவினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கேரளா மாநிலத்தில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லையிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எல்லையில் கண்காணிப்பு: தற்போது சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவக் குழுக்களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், இரண்டு கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் இடம்பெற்றுள்ளனர் எனவும். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பிறகு அனுமதிக்கப்படுவதாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் பாதிப்பு: கோவை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் இருக்கும் நிலையில் பறவை காய்ச்சல் தொடர்பாக அந்த பண்ணைகளையும் கண்காணித்து வருவதாகவும், நீர் நிலைகளில் உள்ள பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக 400க்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டதில் பறவை காய்ச்சல் அறிகுறி இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications