"மக்களிடம் செல்!" தவெக மேடையில் திடீரென திமுக நிறுவனர் அண்ணாவை குறிப்பிட்ட விஜய்!கவனித்த தொண்டர்கள்
கோவை: தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். தவெக ஆட்சி அமையும் போது அது சுத்தமான ஊழல் பேர்வழிகள் இல்லாத ஆட்சியாக இருக்கும் என விஜய் பேசினார். மேலும், விஜய் தனது உரையில் திமுக நிறுவனர் அண்ணாவையும் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
கோவையில் தவெகவின் பூத் கமிட்டி மாநாடு கடந்த இரு நாட்களாகக் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார். நேற்று முதல் நாள் மாநாடு நடந்து முடிந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக மாநாடு நடைபெற்றது. இதிலும் தவெக பூத் கமிட்டி ஏஜெண்டுகள் பலரும் பங்கேற்றனர்.

விஜய்
இன்று கோவையில் நடந்த தவெக பூத் கமிட்டியின் இரண்டாவது நாள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அண்ணாவின் உரையை மேற்கோள் காட்டிய விஜய், மக்களுடன் இருந்தே மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். அண்ணா உரையைப் புரிந்து கொண்டு தவெகவினர் செயல்பட வேண்டும் என விஜய் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் விஜய் மேலும் கூறுகையில், "இது வாக்கிற்காக மட்டும் நடத்தப்படும் கூட்டம் இல்லை.. ஏனென்றால் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் தொடங்கப்பட்ட கட்சி இல்லை.. சமரசம் என்ற பேச்சிற்கே இங்கே இடம் இல்லை. மக்களுக்கு ஒரு நல்லது நடக்கிறது என்றால், எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயங்க மாட்டோம்.
அண்ணாவை நினைவில் வைத்து கொள்ளுங்கள்
நம்முடைய ஆட்சி அமையும் போது அது சுத்தமான க்ளீன் அரசாக இருக்கும். நமது ஆட்சியில் கரப்ஷன் இருக்காது, குற்றவாளிகளும் இருக்க மாட்டார்கள். இதனால் நமது பூத் லெவல் ஏஜெண்டுகள் தைரியமாக மக்களிடம் சென்று பேசுங்கள். பூத் ஏஜெண்டுகள் மக்களிடம் செல்லும்போது, அண்ணா சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நேர்மையான ஆட்சி
அண்ணா சொன்னதை நான் இங்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.. மக்களிடம் செல்.. மக்களிடம் இருந்து கற்றுக்கொள்.. மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு... மக்களை நேசி.. மக்களுக்காகச் சேவை செய் என்றார் அண்ணா. அதை நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.. கோவை ஊர் சிறுவாணித் தண்ணீரைப் போல் சுத்தமான ஒரு ஆட்சியை அமைக்க முடியும்.. இன்னும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால், தவெக ஆட்சி தெளிவான, உண்மையான, வெளிப்படையான, நிர்வாகம் செய்யக் கூடிய ஆட்சியாக அமையும்.
இதனால் நாம் ஒவ்வொருவரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டும். பூத்திற்கு வந்து வாக்கு செலுத்துவோருக்கு உதவியாக இருக்க வேண்டியது நமது கடமை. குடும்பம், குடும்பமாகக் கோவிலுக்குச் செல்வார்கள்.. பண்டிகை கொண்டாடுவார்கள்.. அதுபோல நமக்காகக் குடும்பமாக வந்து ஓட்டுப் போடும் மக்களுக்காகவும் அதைச் செய்ய வேண்டும்.
சாதாரணக் கட்சி இல்லை
அப்படிச் செய்தால் தான் தவெக என்பது வழக்கமான கட்சி இல்லை. அது ஒரு விடுதலை இயக்கம் என்பது மற்றவர்களுக்குத் தெரியும். இந்த வெற்றியை நாம் அடைவதற்கு உங்கள் செயல்பாடுகள் மிகவும் முக்கியம். அதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். மக்களிடம் சென்று பேசுங்கள்.. அனைவரும் உறுதியோடு இருங்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications