விவசாயியை தாக்கிய உதவியாளர்...காலில் விழுந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் - விஏஒ சஸ்பெண்ட்
கோவை அன்னூர் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இளைஞரின் காலில் உதவியாளர் விழுந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்
கோவை: அன்னூர் ஒட்டர்பாளையத்தில் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இளைஞரின் காலில் உதவியாளர் விழுந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணையில் உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது. விவசாயியை தாக்கி திட்டியதாக கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தில் கலைச்செல்வி என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு உதவியாளராக அதே ஊரை சேர்ந்த முத்துசாமி என்பவர் தண்டல்காரர் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த 7ஆம் தேதியன்று கிராம நிர்வாக அலுவலகத்தில் கோபால்சாமி என்பவர் காலில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி என்பவர் விழும் வீடியோ கடந்த 7 ஆம் தேதி இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ காட்சிகள் பற்றி நேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கூறியிருந்தார்.. இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரான் தெரிவித்திருந்தார்.
விசாரணைக்கு பின்னர் கிராம உதவியாளர் முத்துசாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கியத்தற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், அதே வேளையில் விவசாயி கோபால்சாமி காலில் , கிராம உதவியாளர் முத்துச்சாமி விழுந்தற்கான ஆதாரம் இருப்பதாக அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
விவசாயி கோபால்சாமி மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக விஏஒ கலைச்செல்வி புகாரில் ஒரு வழக்கும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கிராம உதவியாளர் முத்துச்சாமி கொடுத்த புகாரின் கீழ் ஒரு வழக்கும் என இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கோபால்சாமி மீது நான்கு பிரிவுகளின் கீழ் அன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் விவசாயியான கோபால்சாமி தனது நிலப்பிரச்சனை தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் பேசி கொண்டிருந்தபோது அலுவலக உதவியாளர் முத்துசாமிதான் திடீரென கோபால்சாமியை கன்னத்தில் பலமாக அறைந்து கீழே தள்ளியதாகவும், முத்துசாமியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கோபால்சாமி கூறவே இல்லை என அவரது தரப்பில் பதில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வி.ஏ.ஓ அலுவலகத்தில் கிராம உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால்சாமி அடித்து கீழே தள்ளும் வீடியோ காட்சிகள் வெளியானது. முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
தன்னை அறைந்து தள்ளிவிட்டது வீடியோவாக எடுக்கப்பட்டது தெரிந்ததும், முத்துசாமி நாடகமாடி கோபால்சாமி காலில் விழுந்ததாகவும் தெரிய வந்தது. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகின. இந்த விவகாரத்தை வேண்டுமென்று திட்டமிட்டு சாதிரீதியாக முத்துசாமி தவறாக சித்தரித்ததும் விசாரணையில் தகவல் வெளியானது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. விவசாயி கோபால்சாமியை கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துச்சாமி அறைந்து கீழே தள்ளி விட்டு திட்டுகிறார். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் விசாரணையின்போது பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காகவும், மனு கொடுக்க வந்த கோபால்சாமியை அடித்ததற்காகவும், மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் கோவை வடக்கு கோட்டாட்சியர் ரவிசந்திரன் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியை பணியிடை நீக்கம் செய்தார். இதே போல் அன்னூர் வட்டாட்சியர் ரத்தினம், ஒட்டர்பாளையம் கிராம உதவியாளர் முத்துச்சாமியை பணியிடை நீக்கம் செய்தார்.
இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அன்னூர் காவல் நிலையத்தில் கிராம உதவியாளர் முத்துசாமி மீது காயம் ஏற்படுத்துதல் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவர் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ள அன்னூர் காவல்துறையினர் , ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்து, தவறான நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications