கூட்டணி ஆட்சியா.. ‘இங்க அமித்ஷா சொல்றது மட்டும் தான் நடக்கும்’ – வானதி சீனிவாசன் திட்டவட்டம்
கோவை: திருப்பூர் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியா, தனி ஆட்சியா என்ற விவாதம் அந்த கட்சிகளிடையே விவாத பொருளாக மாறியுள்ளது. 'பாஜக ஆட்சி என்று தான் நான் கூறுவேன். அது என் தனிப்பட்ட விருப்பம்.' என்று அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில் வானதி சீனிவாசன் 'தேசிய தலைமை கூறுவதை தான் அனைவரும் சொல்ல வேண்டும். இங்கு அமித்ஷா சொல்வது தான் நடக்கும்.' என்று கூறியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஒரு தேசிய கட்சியில், கட்சியின் தேசிய தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் கட்சியில் எல்லோரும் சொல்ல வேண்டும். தேசிய தலைமை, மாநில தலைமை கருத்து தனித்தனியாக எல்லாம் இல்லை. முன்னாள் மாநில தலைவர் அவரின் கருத்தை சொல்லியுள்ளார். அதை சொல்லும் அது என் தனிப்பட்ட கருத்து என்று சொல்கிறார்.

அதை பூதாகரமாக்கி அவர் அப்படி சொல்கிறார். இவர் இப்படி சொல்கிறார் என்று எல்லாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். இதில் எந்த வேறுபாடும் இல்லை. கட்சிக்கு ஒரே நிலைப்பாடு தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே எங்கள் உள்துறை அமைச்சர் சென்னையில் கூட்டணி அமைந்தபோது என்ன அறிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுக தலைமை ஏற்றும். எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்று வழிநடத்துவார் என்று கூறினார்.
இதில் எந்த குழப்பமும் இல்லை. யாருக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஊடகங்கள் இதை பெரிய பிரச்னையாக செய்தி போடாமல் இருந்தால் சரி. கூட்டணி அமைச்சரவை, கூட்டணி அரசு இது மாதிரியான விஷயங்களில் தேசிய தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் தமிழக பாஜகவுக்கும் பொருந்தும். தமிழக பாஜக தனிக்கட்சி இல்லை. தேசிய கட்சியின் மாநில பிரிவு. அவ்வளவுதான்.
அதனால் அமித்ஷா என்ன சொல்லியிருக்காரோ அதுதான் இங்கு நடக்கும். யாராவது பேச்சுவார்த்தை நடத்துகின்ற கட்சியை பற்றி வெளியில் சொல்வார்களா. ஒரு கட்சி இல்லை நிறைய கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அரசியல் அமைப்பு சட்டத்தில் மத்திய அரசுக்கு என்று சில துறைகள் உள்ளன. மாநில அரசுக்கு என்று சில துறைகள் உள்ளன. சில திட்டங்களை இருவரும் சேர்ந்து தான் செயல்படுத்த வேண்டும்.
இத்தனை நாள் மாநில அரசு தூய்மை இந்தியா திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், ஆயுஸ்மான் பாரத் திட்டம் எங்காவது ஸ்டாலின் அவர்கள், நாங்கள் இந்த திட்டத்தில் இத்தனை ஒதுக்கீடு செய்கிறோம், இதில் பிரதமர் மோடி இவ்வளவு தான் கொடுத்துள்ளது என்று ஒரு திட்டத்துக்கு சொல்லியிருக்கிறார்களா. மோடியின் படத்தைத்தான் போட்டுள்ளார்களா.
நாங்கள் பாஜக ஆட்சியின் சாதனைகளை ஊர் ஊராக மக்களிடம் சொல்லும்போது, ஸ்டாலினுக்கு மாப்பிள்ளை நியாபகத்துக்கு வந்துவிட்டார். ஸ்டாலினுக்கு மாப்பிள்ளை தான் எல்லாம் என்று எங்களுக்கும் தெரியும். மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்தர சிங், தமிழகத்தில் திமுக அமைச்சர்கள், கம்யூனிஸ்ட் எம்பிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழிலேயே பதில் அளித்துள்ளார்.
கீழடி ஆராய்ச்சியை ஆரம்பத்தில் மத்திய தொல்லியல் துறை செய்தது. அதற்கு பிறகு அந்த ஆராய்ச்சி ஆவணங்களை சர்வதேச அளவில் எடுத்து செல்ல வேண்டும். அதற்கான பதிலகளை கொடுக்க சற்று நேரம் எடுத்ததால் மத்திய அரசு அறிக்கை தாமதம் ஆகியுள்ளது. கீழடியை பற்றி இவ்வளவு பேசுபவர்கள் அதைவிட பழமையான ஆதிச்சநல்லூர் குறித்து இப்போதும் மத்திய அரசு தான் தொல்லியல் ஆய்வு செய்கிறது.
தமிழர்களின் தொன்மை, தமிழர்களின் நாகரீகம் என்றால் பாஜகவும், மோடியும் தான் முதலில் சந்தோசப்படுவார்கள். குறுகிய கால அரசியலுக்காக கீழடியை வைத்து திமுகவும், கம்யூனிஸ்ட்களும் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி அரசியல் செய்கிறார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications