கடைக்கு போன சிறுமி முட்புதரில் சடலமாக மீட்பு.. தமிழகத்தை உலுக்கிய கோவை சம்பவம்! என்ன நடந்தது?
கோவை: கோவை சூலூரில் மாயமான 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று இரவு முதல் விடிய விடிய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை சூலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை மாலையில் கடைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சடலமாக சிறுமி மீட்பு
பைக்கில் வந்த இருவர் சிறுமியை கடத்தி சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சூலூர் அருகே உள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இது அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சிறுமி காணாமல் போனதாக வழக்கு தொடரப்பட்ட உடனேயே போலீசார் சிறுமியின் தந்தைக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் விசாரணையை தொடங்கினர். மேலும் சிறுமியின் தந்தைக்கு விரோதமானவர்கள் யார் யார் என்று விசாரித்து அவர்களிடமும் விசாரணையை தொடங்கினர்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?
குடும்ப பிரச்சனையில் சிறுமியை கடத்தி மிரட்டல் விடுக்கலாம் என நினைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இதற்கிடையே சிறுமி சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து அவர் கொலை செய்யப்பட்டிருப்பது என்பதை உறுதி செய்தனர். ஆனால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
சிறுமியின் உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இஎஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகே மற்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? பாலியல் துன்புறுத்தல் நடந்ததா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
சிறுமி கடைக்கு சென்றபோது
குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி அக்கம், பக்கத்து இளைஞர்களும் சூலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகாமல் குற்றவாளியை கைது செய்ய கோரி அதிகாலை 5 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 33 வயது கார்த்தி மற்றும் அவருக்கு உதவியாக இருந்ததாக மோகன் ராஜ் என இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போலீசார் அக்கம்பக்கத்தில் நடத்திய விசாரணையிலும், அங்குள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரித்ததில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் 33 வயது கார்த்தி என்பவர் தான் சிறுமி கடைக்கு செல்லும் போது அழைத்து சென்றதாக தெரிய வந்தது. இதையடுத்து தான் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு மோகன் ராஜ் உதவியதாக கூறப்பட்டது. இதையடுத்து மோகன்ராஜையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.














Click it and Unblock the Notifications