ஒட்டுமொத்த கோவையும் எதிர்பார்க்கும் அவினாசி சாலை மேம்பாலம்! ஹோப் காலேஜ் மட்டும் பாக்கி! புது தகவல்
கோவை: கோவை நகரின் பிரதான சாலையாக அறியப்படும் அவினாசி சாலையில் இப்போது பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த மேம்பாலத்தின் பணிகள் எப்போது முடியும். இது மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அதிகாரிகள் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து மிக முக்கிய நகரம் என்றால் அது கோவை தான். இருப்பினும், சென்னை அளவுக்குக் கோவையில் பொது போக்குவரத்து எதுவும் இல்லை. பேருந்துகளை மட்டுமே நம்பி உள்ளன.

இதனால் அங்கு டிராபிக் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த போக்குவரத்தால் கோவை மக்கள் தொடர்ந்து பல இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். மேலும், இதைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
அவினாசி சாலை மேம்பாலம்: இந்த கோவை நகரில் முக்கிய சாலை என்றால் அது அவினாசி சாலை தான்.. பல முக்கிய நிறுவனங்களும் இந்த அவிநாசி சாலையில் தான் செயல்பட்டு வருகிறது. இதனால் அங்குப் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த இங்கு சுமார் 10.1 கிமீ தூரத்தில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கட்டுமான பணிகளும் படுவேகமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த முக்கிய அவினாசி சாலை மேம்பாலத்தின் பணிகள் இன்னும் 3- 4 மாதங்களில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "மேம்பாலப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. 3, 4 மாதங்களில் இந்தாண்டு இறுதிக்குள் பிரதான பாலத்தைத் திறக்கவுள்ளோம். அதற்குள் தேவையான பணிகளை முடித்துவிடுவோம் என நம்புகிறோம்" என்றார்.
தூண்கள் அமைக்கும் பணி: கோவையைப் பொறுத்தவரை அவினாசி சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக்கதாகவே இருந்துள்ளது. இந்தச் சூழலில் உப்பிலிபாளையம் முதல் 10.1 கி.மீ. தொலைவிற்கு ரூ. 1,621 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த மேம்பாலம் டிராபிக் பாதிப்பைப் பெருமளவு குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு வழிச் சாலையாக அமையும் இந்த மேம்பாலத்தில் மொத்தம் 304 தூண்கள் இருக்கும். அதில் சுமார் 250 தூண்களை அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் 50 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.
அதற்கான பணிகள் படுவேகமாக நடந்து வரும் நிலையில், புத்தாண்டிற்குள் அந்த பணிகள் முடியும் எனத் தெரிகிறது. ஹோப் காலேஜ் அருகே அருகே 52 மீட்டர் ஸ்டீல் ஸ்பானை முழுவதுமாக கான்கிரீட் மற்றும் பிடுமன் டாப்பிங் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முழுமையாக நிறைவடைய இந்தாண்டு இறுதி வரை ஆகும் என்றே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஹோப் காலேஜ் மட்டும் பாக்கி: அதேபோல இந்த மேம்பாலத்தில் மொத்தம் 8 இடங்களில் வாகனங்கள் பிரதான சாலையை அணுக ரேம்ப் அமைக்கப்படும். அதில் ஹோப் காலேஜில் மட்டும் ரேம்ப் அமைக்கும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. அதுவும் நிறைவடைந்தால் அவினாசி சாலை மேம்பாலம் படுஜோராக திறப்பு விழாவுக்கு ரெடியாகிவிடும்.
இந்த பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு ஏற்ப அவினாசி சாலையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தால் கோவை நகரின் போக்குவரத்து பெரியளவில் குறையும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications