"முதல்வர் சொல்வது நடக்கும்!" குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்! பிடிஆர் சொன்ன முக்கிய தகவல்
பெண்களுக்கான உரிமை தொகை குறித்து அமைச்சர் பிடிஆர் முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.
கோவை: ஈரோடு பிரசாரம் சமயத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வர் கூறியிருந்தார். இந்நிலையில், இது குறித்து அமைச்சர் பிடிஆர் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
கோவையில் ஜி.டி.நாயுடு வளாகத்தில் "எக்ஸ்பிரிமெண்டா" என்ற அறிவியல் மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு அறிவியல் மையத்தைத் திறந்து வைத்தார்.
மிகப் பிரம்மாண்டமாக 40,000 சதுர அடியில் அமையும் இந்த மையத்தில் பல அறிவியல் பரிசோதனை கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்குப் பெரியளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அமைச்சர் பிடிஆர்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதியமைச்சர் பிடிஆர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் முதல்வன் திட்டம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து பகுதி மாணவர்கள், பெற்றோர்களுக்கு வழிகாட்டும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முதல்வரின் தனிப்பட்ட கவனம் பெற்றுள்ளது.. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 120 பரிசோதனை கருவிகள் பாதி ஜெர்மனியிலும், பாதி கோவையிலும் தயாரிக்கப்பட்டவை. வரும் தலைமுறையினருக்கு இது மிகப் பெரியளவில் ஊக்குவிப்பதாக இருக்கும்.

நடவடிக்கை
தமிழகத்தில் இருக்கும் மாணவர்களுக்குத் திறன் மேம்பாடு ரொம்பவே முக்கியம். இதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருப்பினும், அரசால் ஓரளவுக்குத் தான் செய்ய முடியும். தனியார் பங்களிப்பும் இதில் முக்கியம், தனியார் பங்களிப்புடன் கூடுதலாகப் பலருக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கிறோம். இந்த மையத்தில் பயிற்சி பெற்றால், எளிதாக ஜெர்மனியில் வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது" என்றார்.

உரிமை தொகை
தொடர்ந்து மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை திட்டம் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்குப் பதிலளித்த அமைச்சர் பிடிஆர், "இப்போது என்னால் பட்ஜெட் குறித்து எதுவும் சொல்ல முடியாது. இருப்பினும் முதலமைச்சர் சொல்வது நடக்கும்" என்று மட்டும் தெரிவித்தார். கல்விக் கடன் ரத்து எப்போது ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "முதல்வர் சொல்வது அனைத்தும் படிப்படியாக நடக்கும்" என்று அவர் தெரிவித்தார். மேலும், "மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கல்விக்குத் தமிழ்நாடு தான் கூடுதலாகச் செலவு செய்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ஒரு வருடத்திற்கு முழுமையாகவும், 3 மாதத்திற்குச் சற்றும் நிலுவையில் உள்ளது. கடந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டதாக ஒன்றிய நிதியமைச்சர் சொன்னார். இன்னுமே நமக்கு 4,231 கோடி வர வேண்டியுள்ளது. இம்மாதம் 4000 கோடி வரும்.. அதுபோக இழப்பீட்டுத் தொகையும் நமக்கு வர வேண்டியுள்ளது. மாதம் மாதம் வரும் ஜிஎஸ்டி தொகையும் தாமதமாக வருகிறது. அனைத்து வரிகளையும் ஒன்றிய அரசு வசூலித்து அதைத் திரும்பித் தருவது திறனற்ற செயல்.

தப்பாக இருக்கிறது
ஒவ்வொரு மாநிலமும் அவை வசூலிக்கும் தொகையை வைத்துக் கொண்டு, மத்திய அரசிற்கான வரியை மத்திய அரசிற்குச் செலுத்துவதே சரியான முறையாக இருக்கும். அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் மதுரையில் நடக்க உள்ளது. ஜிஎஸ்டி செயல்பாட்டைச் சிறப்பிக்க முதலமைச்சர் ஒப்புதலுடன் அக்கூட்டத்தில் சில கருத்துக்களைச் சொல்ல இருக்கிறேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாங்கள் ஆட்சிக்கு வரும்போது 62 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை இருந்து. அதேபோல நிதிப் பற்றாக்குறை 90 ஆயிரம் கோடியாக இருந்தது.

நிதிநிலை
பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக முதல் ஆண்டிலேயே வருவாய் பற்றாக்குறையை 46,000 கோடியாகக் குறைத்தோம். அதேபோல நிதிப் பற்றாக்குறையை 70 சதவீதம் வரை குறைத்தோம். கடந்த ஆண்டைப் போலவே, இந்தாண்டும் நிச்சயம் நிதிநிலை சீராகும். அதேநேரம் தேவையான சீர்திருத்தமும் செய்ய வேண்டியிருக்கிறது. 2014 வரை தமிழ்நாட்டின் நிதிநிலை சிறப்பாக இருந்தது. அதன் பின்னரே மோசமடைந்தது. 7 ஆண்டுகளில் சரிந்த நிதிநிலையை இரண்டே ஆண்டுகளில் திருத்தியுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications